Wednesday, September 16, 2009

சந்திப்பு 5 : இராம கண்ணபிரான் (Rama Kannapiran)


எழுத்தாளர் இராம கண்ணபிரானை நான் சந்தித்த தினம் 1982 மே 4. அவர் குடியிருந்த தோ பாயோ வீட்டில் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டரை மணி வரை நாங்கள் பேசினோம்.
மேலும் சில விளக்கம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று தீர்மானித்து 2009 செப்டம்பர் 16 புதன்கிழமை அவரை மறுபடியும் சந்தித்தேன். மாலை நான்கு மணியிலிருந்து இரவு ஏழே கால் மணி வரை உரையாடல் நீடித்தது.
(புதிய தகவல்களை அடைப்புக்குறிக்குள் சேர்த்திருக்கிறேன்.)



.. எது சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்?

இந்நாட்டுப் பிரச்னைகளைத் தொட்டு எழுதக்கூடியது. இந்த இடம் இந்திய, தமிழ், சீன, மலாய் மக்கள் வாழும் இடம். இவற்றை யார் வேண்டுமானாலும் எழுதலாம். உதாரணத்திற்கு அகிலன். மலேசிய சிங்கப்பூர் வட்டாரம் பற்றிக் கதை, நாவல் எழுதியிருக்கிறார். நெஞ்சினலைகள், பால்மரக்காட்டினிலே நாவல்களைச் சொல்லலாம்.

இங்கே உள்ளவர்தான் எழுதவேண்டும் என்ற அவசியமில்லை. இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து இங்குள்ள பிரச்னைகளை நேரில் உணர்ந்து எழுதினால் நல்லது. மற்றவர்கள் எழுதினாலும் பிரச்னைகளை ஆழமாக ஆராய்ந்து விஷயங்களை நன்கு உள்வாங்கிக்கொண்டு எழுதவேண்டும்.

(மலேசியாவுக்கு வராமலேயே அகிலன் நெஞ்சினலைகள் எழுதினார். குறிப்புகள் சேகரித்து அவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதிய நாவல் அது. மலேசியா சிங்கப்பூருக்கு வந்துவிட்டுப் போனபின் பால்மரக் காட்டினிலே நாவலை கலைமகள் இதழில் தொடராக எழுதினார். அதில் சில factual errors இடம்பெற்றது உண்மைதான்.

கறுப்புத்துரை என்ற சிறுகதை அவர் இங்கேயே எழுதி உதயம் இதழுக்கு அனுப்பியது.

அந்தக் கதைக்கு அகிலன் முதலில் வைத்த பெயர் வேறு. கந்தசாமியின் மகன் என்று ஏதோ ஒரு பெயர் என நினைக்கிறேன். அதைவிட கறுப்புத்துரை என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னவர் நா. கோவிந்தசாமி. வெள்ளைத்துரையைப் போலவே நம் கறுப்புத்துரைகள் மலேசியத் தோட்டங்களில் எப்படி அட்டகாசம் செய்தார்கள் என்பதை கோவிந்தசாமி எடுத்துச் சொன்னார். அகிலன் உடனே பழைய தலைப்பை அடித்துவிட்டுக் கறுப்புத்துரை என்று எழுதியதை நானே கோவிந்தசாமி வீட்டில் என் கண்ணால் பார்த்தேன்.

அகிலன் இங்கு வருவதற்குமுன் இங்கு வெளிவந்திருக்கும் இலக்கியத்தைப் படித்துப் பார்த்துவிட்டுத்தான் வருவேன் என்று விடாப்பிடியாகச் சொல்லிவிட்டார். பல நூல்கள் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அவற்றுள் மலபார் குமாரின் குறுநாவல் செம்மண்ணும் நீலமலர்களும் அகிலனை அதிகமாகக் கவர்ந்தது.
(இந்த நாவலுக்கு உண்மைச் சூழலை அறிய குமாரும் நானும் (பாலபாஸ்கரன்) தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் ஒரு ரப்பர்த் தோட்டத்திற்குச் சென்று இரண்டு நாள் தங்கியது ஞாபகத்திற்கு வருகிறது.)


மலேசிய சிங்கப்பூர்க் கதைகளைப் படித்துவிட்டு அகிலன் தமிழ்நாட்டிலேயே ஒரு இதழில் ரசனையோடு விமர்சனம் எழுதியிருந்தார். அதிகக் குறை சொல்லாமல் positive ஆகவே கருத்தைக் கூறியிருந்தார். நம் எழுத்தாளர்கள் அதை மிகவும் பாராட்டி வரவேற்றார்கள்.

என்னுடைய சிறுகதைத் தொகுப்புகள் தமிழ்ப் புத்தகாலயம் மூலம் வெளிவருவதற்கு அகிலனே காரணம்.

அகிலனுடைய கதைகளைக் குறை சொல்பவரும் உண்டு. தி. ஜானகிராமன் இங்கு வந்திருந்தபோது அகிலன் மாதிரி தம்மால் அவசரமாக எழுத முடியாது என்று சொன்னார். தவம் பண்ணினால்தான் கதை வரும் என்பது ஜானகிராமனின் தத்துவம்.

அகிலன் ஊர் திரும்பும்போது வி. டி. அரசு ஆங்கிலத்தில் வெளிவந்த சிங்கப்பூர் மலேசியா தொடர்பான மிகச் சிறந்த ஐந்தாறு சமூக, வரலாற்று நூல்களை வாங்கிக் கொடுத்தனுப்பினார்.)


.. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள்?

அளவில் அதிகமாக எழுதுவோர்
மா. இளங்கண்ணன், சே. வெ. சண்முகம்.

தரத்தைக் கருத்தில் கொண்டு எழுதுவோர்
மு. தங்கராசன் (இன்றைய நிலையில் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்குமாக மொத்தம் 20 நூல்கள் போட்டிருக்கிறார்),

க. இளங்கோவன் (சிறுகதை, புதுக்கவிதை, உருவகக்கதை),

உதுமான் கனி (இளையவன்),

நா. கோவிந்தசாமி (மதிப்பீடுகள், ஒட்டுண்ணிகள் கதைகள் நன்று),

பொன் சுந்தரராசன் (என்னதான் செய்வது பவுன் பரிசுக் கதை),

மு. சு. குருசாமி,

ந. பழநிவேலு.


.. சிங்கப்பூர்த் தமிழர்கள்?

1. ஆங்கிலத் தமிழர்கள்.. ஆங்கிலம் படித்துவிட்டு அரசாங்க வேலையில் இருப்பவர்கள். தமிழ் தெரியாது. ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். நிறைய பேருக்கு அப்படி ஒன்றும் பெரிய படிப்பு இருக்காது. அதிக பட்சமாக O Level, A Level படித்திருப்பார்கள். அவ்வளவுதான்.

2. தமிழ்த் தமிழர்கள்.. தமிழ் மட்டுமே பேசுபவர்கள். தமிழ் மட்டுமே படித்தவர்கள். குறைந்த வருமானம் கொண்டவர்கள். சிங்கப்பூர்த் தமிழரில் பெரும்பான்மையோர் இவர்களே.

3. பயணத் தமிழர்கள்..
கோ. சாரங்கபாணி ஒரு தமிழ் முரசு தலையங்கத்தில் இந்தச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தார். இவர்களுக்குக் குடும்பம் ஊரில் இருக்கும். (கடுதாசி மூலம்தான் குடும்பமே நடக்கும். கடுதாசி வாழ்க்கை எனலாம். குழந்தை பிறப்பு, நல்லது கெட்டது எல்லாம் பல நாள் கழித்துக் கடிதத்தில்தான் வரும். ஊருக்குப் போகிறவரிடம் சாமான்கள் கொடுத்து வீட்டில் தரச்சொல்வது. ஊரிலிருந்து ஆள் வந்தால் அவரைப் பார்த்து மணிக்கணக்காக ஊர் விஷயங்களை விசாரிப்பது. இவர்களைக் காலி ஆட்கள் என்றுகூடச் சொல்வார்கள். உள்ளூர்க்காரர்கள் இவர்களை ஊர்க்குடுமிகள் என்று கேலி செய்வதுமுண்டு. பதிலுக்கு நாட்டான் என்று உள்ளூர்க்காரர்களைக் கேலிசெய்வர் பயணத்தமிழர். முருகு சுப்பிரமணியம், வி. டி. அரசு போன்றவர்கள் ஆரம்பத்தில் பயணத் தமிழர்களே. முருகு Buffalo Road-ல் குடியிருந்தார்.)

தமிழ்த் தமிழர்களுக்குத்தான் நாம் எழுதவேண்டும். அவர்கள்தாம் அதிகம்.

(ஆங்கிலம் படித்தவர்களுக்கும் தமிழ் படித்தவர்களுக்கும் இடையில் நிலவுகின்ற பிளவைக் காட்டும் கதைதான் நாடோடிகள்.)

(இப்பொழுது தமிழர்களில் புது வகையினரைப் பார்க்கிறோம். New Arrivals என்கிற புது வரவுகள். இவர்கள் bilingual. மற்றொரு வகையினர் contract workers என்கிற ஒப்பந்த ஊழியர்கள்.)


.. அண்மையில் கல்விக் கழகத்தில் (I.E) எழுத்தாளர்களை உருவாக்கும் முயற்சி நடப்பதாக நா. கோ சொன்னார். அவர் பாடத்தில் ஒரு பகுதியாகவே கதைக் கலையைக் கற்றுத் தருகிறார். ஆசிரியப் பயிற்சி பெறும் 20, 22 வயது கொண்ட இளையர் 30 கதைகளை எழுதினர். அவற்றில் நமக்குச் சம்பந்தமில்லாத இடங்கள் வருகின்றன. குமுதம் ஆனந்தவிகடன் போலவே கதைகள் தென்படுகின்றன. பிரச்னை இல்லை. ஓரிரு கதை மட்டும் பரவாயில்லை.


.. புது எழுத்தாளர்கள்?

. இரா. துரைமாணிக்கம். தமிழ் ஆசிரியர். சிறுகதை எழுதுகிறார். (இப்பொழுது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் போட்டிருக்கிறார்.)

. மசூது. தமிழ் ஆசிரியர். (இப்பொழுது கவிதை பக்கம் போய்விட்டார்.)

. பி. சிவசாமி. ஆசிரியர். (பின்னர் ஒரு சிறுகதைத் தொகுப்பு வந்தது.)

. ஸ்ரீதேவி.

. சங்கையா. (பின்னர் அகரம் வெளியீட்டாக விடுதலை சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்தார். இவ்வாண்டு காலமானார்.)

. வீரப்பன் லட்சுமி. தமிழ் ஆசிரியை. Potential Writer. Mesage, Form இரண்டும் இணைந்து வருது. சமீபத்தில் நாடகம் நிறைய எழுதுகிறார்.

. RTS-ல் செ. ப. பன்னீர்ச்செல்வம், வி. கலைச்செல்வன், மூர்த்தி முதலானோர்.


.. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என்று நாடுகள் தனித்தனியாக இருந்தாலும் பொதுவாக இந்த நாடுகளின் இலக்கியத்தை Overseas Tamil Literature அயலகத் தமிழ் இலக்கியம் என்ற கோணத்தில் பார்க்கவேண்டும்.

தமிழ்க் கதைகள் ஆங்கிலத்தில் வரும்போதுதான் நல்ல திறனாய்வு கிடைக்கும். Favourable, sharp criticism வரும்.
(இழப்புக்கள் கதை ஓர் அனைத்துலக theme. அதனால் மற்ற நாட்டு வாசகர் சிலர் அதனைத் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு சம்பவமாகவே கருதுகின்றனர்.)


.. சுமார் 55 கவிஞர்கள் இருக்கிறார்கள்.
கவிக்குலம் போற்றும் தமிழவேள் எனும் கவிதை நூல் வரப்போகிறது. (இப்போது வந்துவிட்டது.)
தமிழவேள் நாடக மன்றத்தின் வெளியீடு அது.

.. புனைகதை எழுத்தாளர்கள் 100 பேர் இருப்பார்கள். இவர்களைப் பிரதிநிதிக்க ஒரு சங்கம் உண்டா? சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் ஆரம்பத்தில் கவிஞர்களே நிறைய இருந்தார்கள். புனைகதைப் படைப்பாளர்கள் அதிகம் கிடையாது.

.. எழுத்தாளர் கழகம் கவிதை/கதை தொகுப்புகள் போடும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. சிறுகதைப் பொறுப்பு என்னிடம். தமிழ் முரசு, தமிழ் மலரில் விளம்பரம் கொடுத்தோம். பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. சுமார் இருபது கதைகளே வந்தன. 10, 12 கதைகளைத் தொகுத்து நூலாகப் போடலாம் என்று எண்ணம். என் வேலை முடிந்தது.

ஆங்கில இலக்கியம் படிக்கும் ஒருவர் TV படங்களைப் போல எழுதணும் என்றார். நான்கு கதைகளை அனுப்பினார். ஒன்றுகூடத் தேறவில்லை.

(கதை நூல் வரவேயில்லை. என்னுடன் சே. வெ. சண்முகம், நா. கோவிந்தசாமி ஆகியோர் நீதிபதிகள். நீதிபதிகளின் கதைகளும் உத்தேசத் தொகுப்பில் இருந்தன. நீதிபதிகளின் கதைகளை எப்படி போடுவது என்று சிலர் பிரச்னையை எழுப்பித் தகராறு செய்தனர். ஆகவே நூல் திட்டம் கைவிடப்பட்டது. கவிதைத் தொகுப்புக்கு முல்லைவாணன் பொறுப்பேற்றிருந்தார். அது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.)


... எழுதுவோருக்கு எங்கே இடம்?

. RTS. எம். கே. நாராயணன் வந்த பிறகு சிங்கப்பூர்க் கதைகளை ஊக்குவித்தார். ஒரு கதைக்கு 55 வெள்ளி கொடுத்தது வானொலி.

. நாடகம், தொடர் நாடகம், இலக்கிய நாடகம் என்று நிறைய வந்தன. எஸ். எஸ். சர்மா, சே. வெ. சண்முகம் போன்றோர் காசுக்காகவே எழுதினர்.

. நா. கோவிந்தசாமி 40, 45 தனிநாடகங்களும் 3, 4 தொடர் நாடகங்களும் எழுதினார்.

. தமிழ் முரசில் எழுதினால் instant writer திடீர் எழுத்தாளர் ஆகலாம். ஒப்பந்த, பயணத் தமிழர்கள் மட்டுமே முரசில் அதிகமாக எழுதினார்கள். அரசாங்க, சமூக மக்களின் குரலாக முரசு ஒலிக்கவில்லை. சென்னைக் கடிதம், ஜோசியம் படிக்கும் வாசகர்கள் அதிகம். வி இக்குவனம் பொறுப்பாசிரியராக இருந்தபோது சிங்கை சாந்தி, பழனிவேலன் போன்றோர் அதிகம் எழுதினார்கள். வனம் போய்விட்டால் வேறு ஒருவர் வரும்போது அவருடைய போக்கே செயல்படும். முரசுக்கென்று தனித்தன்மை கிடையாது.

. ஏ வீரமணி சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் உருவாகி செழிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தவர். He was obsessed with Singapore Tamil Literature.

. Singa இதழும் இந்தியன் மூவி நியூசும் சிங்கப்பூரிலிருந்து வெளியாகின. மூவி நியூசின் தமிழ்ப் பகுதிக்கு சர்மா பொறுப்பாக இருந்தார். வேல் எனும் பெயரில் ஓர் இதழ் நடத்தினார் அவர். பால் உணர்வுக் கதைகள் எழுதி தம் இலக்கிய அரிப்பைத் தீர்த்துக் கொண்டார் சர்மா.


. மலேசியத் தமிழ் இலக்கியம்?

ஒரு காலத்தில் தமிழ் நேசனில் கதை வந்தால்தான் பெருமை என்ற நிலை இருந்தது. காரைக்கிழார் கவர்ச்சியாகக் கதைகளைப் பிரசுரித்தார். முருகு, பரிதாமணாளன் இருந்த வரை அதிக கவர்ச்சி இருக்காது.

ஒரு சிலர் மலேசியர்கள் நம்மைப் புறக்கணிப்பதாகச் சொல்வார்கள். நம்மை அவர்கள் அங்கீகரிப்பதில்லை என்பர்.

பவுன் பரிசு கிடைக்கவில்லை என்று மா. இளங்கண்ணன் திட்டிக்கொண்டிருக்கிறார்.

நம் கதைகளில் தமிழ்நாட்டு சாயலும் செல்வாக்கும் அதிகம்.

நம் எழுத்தாளர்களின் intellectual background மிகவும் குறைவு. அதிக பட்ச கல்வித் தகுதி O Level அல்லது A Level தான்.

இதெல்லாம் சேர்ந்து creativity-யை (படைப்பாற்றலை) பாதிக்குது. புதுச்சரக்கு இல்லை. எழுதுபவருக்கு சொந்த philosophy (வாழ்க்கை நோக்கு) இல்லை.

Not all writers are thinkers. Ma Ilankannan is not a thinker.


(எனக்குப் பவுன் பரிசு கிடைத்த பிறகு சிலர் எதிர்ப்புக் காட்டினர். அர்த்தமில்லாத எதிர்ப்பு அது.)

இலக்கியக் களத்தில் சிங்கப்பூர்க் கதைகள் மட்டுமே இருக்கவேண்டும் என்பது இளங்கண்ணனின் வாதம். மலேசியாவைச் சேர்த்தால்தான் களம் இன்னும் விரிவாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.

உலகம் முழுக்க உள்ள தமிழர் பிரச்னையே முக்கியம். அதற்காகத்தான் நாடடோடிகள் எழுதினேன்.


என் வளர்ச்சி

பத்து வயதில் சிங்கப்பூருக்கு வந்தேன். தகப்பனார் ராமசாமி முதலியார் கடை வைத்திருந்தார். தந்தை 1922ல் சிராங்கூன் ரோடில் Sri Ratha Rukmani Vilas புத்தகக் கடை ஆரம்பித்தவர். அந்தக் கடைக்கு எதிரிலே 64 சிராங்கூன் ரோடிலும் மற்றொரு கடை இருந்தது. இதுதான் வாசு வளையல் மண்டி. அப்பா நன்றாகப் பாடுவார். தெருக்கூத்தில் நடித்தவர். மலேசியாவுக்குக் கோயில் விழாக்களின்போது சென்று புத்தகக் கடை போட்டுப் பாட்டுப்பாடி விற்பார். அவருடைய சகோதரர்தான் கோலாலம்பூரில் மனோன்மணி விலாச புத்தகசாலை வைத்திருந்தவர்.

போகப் போகப் புத்தகக் கடையோடு மற்ற சில்லறை சாமான்களும் விற்கப்பட்டன. 1940களின் பிற்பகுதியில் கடை ஜவுளிக் கடையாக மாறியது. ஒரு கட்டத்தில் 1950களில் நாட்டுக்கோட்டை செட்டியார் ஒருவருடன் கூட்டுச் சேர்ந்து கடை நடைபெற்றது. அப்போதுதான் நான் வந்தேன்.

அந்த நேரத்தில் கடைக்கு மேலே எஸ். நாராயணன் B.Sc (செட்டியார்) தங்கியிருந்தார். பார்லிமெண்ட் நாராயணன் என்று பெயர் பெற்ற அவர் நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவர். அவர் நிறைய கதைகள் படிப்பவர். ஆனந்தவிகடன், குமுதம் வாங்கிப் படித்தார்.

தகப்பனார் அவ்வப்போது ஊருக்குப் போய்வரக் கூடியவர். தாயார் இங்கு இல்லை. என் தனிமைத் துயரத்தைப் போக்க நாராயணனின் நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். இந்தப் புத்தகங்கள் எல்லாம் எனக்குப் புரியுமா என்று நாராயணன் கேட்பார். கல்கியின் அலை ஓசை நாவல் அவரிடம் இருந்தது.

சிவகாமியின் சபதம் நாவலை 1956ல் படித்தேன். வயது 13 தான். Norris Road-ல் ராமகிருஷ்ணா மடம் இருந்தது. அந்தக் கட்டடத்தின் மேல் மாடியில் நூலகம் உண்டு. அங்குதான் அந்த நாவலை இரவல் வாங்கினேன். தமிழ் நேசன், தமிழ் முரசு ஏடுகளும் அங்கிருந்தன.

அதே போல Race Course Lane-ல் இருந்த Gandhi Memorial Hall-ல் தமிழ் நேசன், தமிழ் முரசு பத்திரிகைகள் இருக்கும். அவற்றைப் படிப்பேன்.

என் எழுத்து முதலில் அச்சில் வந்தது 1955ல். அப்போது எனக்கு வயது 12. கண்ணன் சிறுவர் இதழில் ஒரு விமரசனக் கட்டுரை எழுதினேன். முந்தைய இரண்டு இதழ்களைப் படித்துவிட்டு விமர்சன ரீதியில் எழுதவேண்டும். இதழ் ஆசிரியர் திருத்திப் போட்டிருப்பார் என்று நினைக்கிறேன். உள்ளக் கண்ணாடி என்ற தலைப்பில் வெளிவந்தது அது.

ஆர்வி பச்சை மையில் எழுதி கடிதம் அனுப்பினார். பரிசுப் பணம் 5 ரூபாயை சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பது சிரமமான காரியம் என்றும் அதற்கு ஈடாக ஓர் ஆண்டுக்கு கண்ணன் இதழ் sea mail-ல் இலவசமாக அனுப்பப்படும் என்றும் அவருடைய கடிதம் தெரிவித்தது. இது எனக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது.

1958 ஏப்ரலில் தமிழ் முரசு நடத்திய சிறுகதைப் போட்டிக்கு மூத்த பிள்ளை கதையை அனுப்பினேன். காதல் இல்லாத கதை எழுதவேண்டும் என்பது விதி. எனக்கு வயது 15தான். காதல் எனக்குப் புதிது. தமிழ்ப் படங்கள் பார்ப்பேன். அதனால் ஒரு பாதிப்பு எனலாம். போட்டிக்கு வந்த 96 கதைகளில் என் கதைக்கு இரண்டாவது பரிசு. 15 வெள்ளி பரிசுத் தொகையை அனுப்பி கோ. சாரங்கபாணி கடிதமும் எழுதியிருந்தார்.

பிறகு இருண்ட வீடு கதைப் போட்டியில் மீண்டும் எனக்கு இரண்டாவது பரிசு. 15 வெள்ளி பரிசுப் பணத்தை அனுப்பி முருகு சுப்பிரமணியம் கடிதம் எழுதினார்.

1960ல் அமைதி பிறந்தது கதை எழுதியபோது முருகு என்னைக் கூப்பிட்டு சின்ன வயதில் எப்படி கதை எழுதினாய் என்று கேட்டார். அரைக்கால் சட்டை அணிந்த நிலையில் முருகுவைச் சந்தித்தேன். Buffalo Road-டில் முருகு தங்கியிருந்த நேரம் அது. முரசின் அச்சுக்கோப்பாளர் பொன்னழகை என்னிடம் அனுப்பி ஒரு photo-வும் வாங்கி வரச் சொன்னார். அந்தக் கதையைப் பிரசுரித்து என் படத்தையும் போட்டு எழுத்தாளர் அறிமுகம் செய்தார் முருகு.

63, Buffalo ரோட்டில் முருகுவைப் பார்க்கப் போனபோது அகிலன் கதையைப் படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்தினார். ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வந்த கதை அது. Trunk பெட்டியிலிருந்து பொன்னி இதழை எடுத்துக் கொடுத்துப் படித்துப்பார் என்றார்.

அகிலன் எழுதிய வாழ்வில் இன்பம் நாடக நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். TKS சகோதரர்கள் போட்ட நாடகம் அது. காதல் விரசம் இல்லாத ஒரு கதை.

நான் சொந்தமாக சிறுகதைத் தொகுப்பு போட்டபோது முருகுவிடந்தான் முன்னுரை வாங்கவேண்டும் என்ற ஆசை. அதற்குள் அவர் காலமாகிவிட்டார்.

1961ல் Senior Cambridge தேர்வு வந்தது. கதையின் பக்கம் போகவில்லை.

1965ல் 22 வயதுக்குள் நான் எழுதிய கதைகள் 7.

1966-1969 வரை ஆசிரியப் பயிற்சி. வேலை செய்து கொண்டே பகுதி நேரமாகப் பயிலும் திட்டம் அது. நான் ஆங்கில ஆசிரியர் பயிற்சி பெற்றபோது நா. கோவிந்தசாமி அங்குத் தமிழாசிரியர் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார். அவரை நான் tuck shop-ல் சந்தித்ததுண்டு. 1974க்குப் பிறகு அவருடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது.

1968ல் மகள் பிறந்தாள். மனைவியும் சிங்கப்பூருக்கு வந்தார். அந்த ஆண்டில்தான் தமிழ் நேசனுக்கு அவர் பங்கு கதையை அனுப்பினேன். கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்குப் பிறகு இரண்டாம் பிரவேசம் எழுத்துத் துறையில்.

தீபம் பொங்கல் மலரில் பிரதிபலிப்பு கதை இடம்பெற்றது. தீபத்தில் 1978ல் இழப்புக்கள் கதை வந்தது. இழப்புக்கள் கதையை ஒரு குறுநாவலாக விரித்து எழுதித் தருமாறு திருமலை கேட்டுக்கொண்டார். அதைச் செய்யவில்லை.


சிறுகதை structure எப்படி வந்தது?

கலைமகள் கதைகள் என்னைக் கவர்ந்தன. நா. கோ கூட சொல்வார் என் கதைகள் கலைமகள் கதையைப் போலவே இருக்கிறது என்று.

அகிலன் கதைகளைப் படித்தேன்.

நா. பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன் முதலியவர்கள் கதைகளையும் வாசித்தேன்.

டாக்டர் மு. வ-வின் நெஞ்சில் ஒரு முள் நாவல்
என்னை ரொம்பவே பாதித்தது.

மொத்தம் 100 ஆங்கிலப் புத்தகங்கள், 200 தமிழ் நூல்கள் படித்திருப்பேன்.

சிறுகதையில் திடீர்த் திருப்பம், suspense வரணும் என்று முதலில் நினைத்திருந்தேன். அவை எல்லாம் அவசியமில்லை என்று இப்போது புரிகிறது.

திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையின் moral themes முனைப்பாகத் தெரிகிறது. 4, 5 சம்பவங்களை வைத்து கதையை build up பண்ணுவது வழக்கம். தனித்தனியாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று அடிநாதமாக இருக்கும் தொடர்பு climax-ல் புலப்படும்.

கதையின் தலைப்பு theme-ஐ ஒட்டியே வரும்.

object of reading changes over time.

ஆங்கில ஆசிரியர். ஆங்கிலம் பிழைப்பு மொழி. தமிழ்தான் இயல்பு.

ஜெயகாந்தனை என் மனைவிதான் அறிமுகம் செய்து வைத்தார். 1969ல் ஆனந்தவிகடனில் வந்த சட்டை கதை.

ந. பழனிவேலு தீபத்தை அறிமுகம் செய்தார். தீபம் இதழ்களை bind பண்ணி வைத்திருந்தார். எல்லா இதழ்களையும் படித்தேன். அந்த binding-கை வேறு யாருக்கோ கொடுத்து அது திரும்பி வராமல் போனதாகவும் பழனிவேலு கூறியிருக்கிறார்.

க. இளங்கோவன் நா. கோ வீட்டுக்கு வருவார். அவர் மூலமாகத்தான் இளங்கோவன் எனக்கு அறிமுகம்.

கற்பனைக்கு அப்பால், கலை வடிவைவிட வாழ்க்கையில் உணர்ந்ததை சாதாரணமாகச் சொல்லணும் என்று ஆசை. திடீர்த் திருப்பம் இருக்கக் கூடாது என முடிவு செய்துவிட்டேன். இது நிச்சயம் ஜெயகாந்தனின் பாதிப்பு என்பதில் சந்தேகமில்லை.

தாமரை, செம்மலர் இதழ்களை வாங்கிப் படித்தேன். இவற்றைப் படிக்கக்கூடாது என்று அகிலன்தான் சொன்னார். உத்தியோகம் முக்கியமா தாமரை முக்கியமா என்று அவர் கேட்டார். அதிலிருந்து அவற்றை வாங்குவதை நிறுத்திவிட்டேன். அவை இரண்டும் பொதுவுடைமைப் போக்கு கொண்டவை என்பதே அதற்குக் காரணம்.

Serious books, light books என differentiate பண்ணினேன். சிவசங்கரி, சுஜாதாவிலிருந்து தகழிக்குத் தீவிரமாக மாறினேன்.

டாக்டர் தண்டாயுதம், டாக்டர் மா. ராமலிங்கம் என் இலக்கிய விமர்சன குருமார். நா. கோ கூட சொல்வார் நான் ராமலிங்கம் கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் பார்க்கவேண்டும் என்று.

சிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விதி இல்லை. யாரையும் பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை. புதுமைப்பித்தன் கதைகளில் உத்தி முறைகள் நிறைய உள்ளன என்பது தெரிகிறது.

Stream of Consciousness (நனவோடை உத்தி) பாணி என்று நினைத்துக் கொண்டு ஒரு கதை எழுதி தமிழ் நேசனுக்கு அனுப்பினேன். நினைவோட்டம் என்பது நான் கொடுத்த தலைப்பு. நேசனில் கதைகளுக்குப் பொறுப்பாக இருந்த பரிதாமணாளன் தலைப்பை மாற்றி 25 ஆண்டுகள் என்று போட்டார். பவுன் பரிசு வாங்கிய கதை அது.

அவர் அப்படி செய்ததும் நல்லதாகப் போய்விட்டது. நான் எழுதியது நனவோடை உத்தி அல்ல என்பதை James Joyce-சைப் பிறகு படித்து உணர்ந்து கொண்டேன்.

சிறுகதை பற்றிய concept முக்கியமாக moral values கொஞ்சம்கூட மாறவில்லை.

கதையே இல்லாத ஒருகதையாக அமைந்ததுதான் தானாமேரா டையரி. கதையம்சம் இல்லை என்று தண்டாயுதம்கூட சொன்னார். #

Monday, September 14, 2009

சந்திப்பு 4: எம் கே நாராயணன் (M K Narayanan)



சிங்கப்பூர் வானொலியின் இந்தியப் பகுதித் தலைவராக இருந்தபோது எம் கே நாராயணன் அவர்களைச் சந்தித்தேன். Controller Radio 4 என்பது அவருடைய பதவி. SBC எனும் சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகம் செயல்பட்ட நேரம் அது. நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அவர் பொறுப்பு. செய்திப் பிரிவு தனியாக இயங்கியது. சந்தித்த தினம் 5 மே 1982. பிற்பகல் 2.45 முதல் மாலை 5.30 வரை பேசினோம்.




. வானொலி அரசாங்க நிறுவனம். இலக்கியத்தை வளர்க்க வேண்டும் என்பது அதன் நோக்கமல்ல.

. எழுத்தாளர் தொகை இல்லை. எழுத்து வளர்ச்சி இல்லை. 15 வருஷத்துக்குமுன் எழுதியவர்களே இன்றும் எழுதுகிறார்கள். புது எழுத்தாளர்கள் விடாப்பிடியாக எழுதுவதில்லை.

. RTS (Radio TV Singapore) ஒலிபரப்பும் சிறுகதையில் தரமில்லை. இரு பெண்கள் நாடகம் எழுதுகிறார்கள். முதிர்ச்சி இல்லை. ஏன்? பரந்த வாழ்க்கை நோக்கு இல்லை. இங்குள்ள சுற்றுப்புறச் சூழல் கொண்டவர்கள்/ அறிந்தவர்கள் இல்லை.

. எழுத்தாளர்களுக்குப் பொதுவாக மதிநுட்பம் குறைவு என்பது என் தனிப்பட்ட எண்ணம். அவர்கள் 25 வயதுக்குள் இருப்பதால் நன்றாக எழுதக்கூடியவர் என்றாலும் ஒரு முதிர்ச்சி தென்படுவதில்லை.

. காதல் அதிகமுண்டு. Plot (கதைப்பின்னல்) என்றால் 32 வகை plot-தான் உண்டு. அந்த plot-டுக்கு மறு உருவம் கொடுப்பதே எழுத்தாளர் வேலை.

. வருகின்ற எழுத்துப் படிவத்தை முதலில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் படித்துப் பார்ப்பார். பிறகு மற்றொரு தயாரிப்பாளர் படிப்பார். இரண்டு பேரும் இணங்கினால் அதை ஏற்றுக் கொள்வோம். முரண்பட்ட விஷயங்கள் இருப்பதாகத் தெரிந்தால் நானும் படித்துப் பார்த்து முடிவு செய்வோம்.

. படுபயங்கரமான கற்பனை உண்டு. இரு நண்பர்கள் மீன்பிடிக்க கடலுக்குப் போகிறார்கள். போகுமுன் ஒரு சபதம் எடுத்துக்கொள்கிறார்கள்.நான் செத்தால் என் நீற்றை நீ நெஞ்சில் பூசு. நீ செத்தால் உன் நீற்றை நான் நெஞ்சில் பூசுகிறேன். நம் இயல்புக்கு மீறிய காட்டுமிராண்டித் தனமான கற்பனை. எங்கோ ஆங்கிலத்தில் படித்துவிட்டு ஒப்புவிக்கிறார்கள் போலும்.

. தமிழ்நாட்டுத் திரைப்படம் கற்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வாழ்வில் நடப்பதை அப்படியே காட்டினால் என்ன தவறு என்று கேட்கிறார்கள். இளம் தலைமுறை கொஞ்சம் துடுக்குத்தனமாக நடக்கலாம்.

. எந்த மாதிரிப் படைப்பு என்றாலும் அதை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதில் தயாரிப்பாளரின் கருத்துக்கு 80 விழுக்காடு இடமுண்டு.

. 1950-60களில் இருந்த வளர்ச்சி இப்போது கிடையாது. அந்தக் காலத்தில் தமிழ் படித்தவர் குறைவு. இப்போது அதிகமானோர் தமிழ் படிக்கிறார்கள்.

. தமிழ் இரண்டாம் மொழியாக, கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. பாட நூல்களும் மற்ற துணை நூல்களும் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகின்றன.

GCE O Level தமிழ் கட்டாயம்.
PreU A Level விருப்பப்பாடம் (optional).
U Level தமிழ் கிடையாது.
I E (கல்விக் கழகம் அதாவது ஆசிரியர் பயிற்சிக் கழகம்) மட்டும் தமிழ்.

. தமிழுக்குக் கிடைக்கும் reading materials (வாசிப்பு நூல்கள்) தரம் குன்றியவை.

. ஆங்கிலத்திற்குக் கிடைக்கும் வாசிப்பு நூல்கள் பிரிட்டன், அமெரிக்காவிலிருந்து வருகின்றன. தரமாக உள்ளன.

. தொலைக்காட்சிப் படங்கள் ஆங்கிலத்தில் நன்றாக இருக்கின்றன. தமிழில் அப்படி வருவதில்லை.

. தமிழ் மொழி மட்டமாக (inferior) கருதப்படுகிறது. அதனால் படைப்பிலக்கியங்கள் வருவதில்லை.

. தமிழ் மொழி வளர்கிறதா? ஆமாம்.
. தமிழ் உயிருள்ள மொழியா? ஆமாம்.
. தமிழில் பேசினால் கூலி என்ற ஓர் எண்ணம் முன்பு இருந்தது. இப்போது அந்த நிலைமை இல்லை.

. தமிழும் முக்கியம். அதே சமயத்தில் ஆங்கிலமும் முக்கியம்.

. Speak Mandarin Campaign தமிழுக்கு அபாயமோ என்று பலர் ஐயப்பட்டனர். அதனால் தமிழின் முக்கியத்துவம் வலுத்தது.

. இரண்டாம் மொழித் தேர்வில் இந்தியர்கள் சிறப்பாகச் செய்கின்றனர். பெற்றோர் சிலர் பிள்ளைகளிடமிருந்து தமிழ் கற்றுக்கொள்கின்றனர்.

. வானொலிக்கு 30 முதல் 40 பேர் எழுதுகிறார்கள். ஆனால் அனைவரும் தொடர்ந்து சீராக எழுதுவதில்லை. விட்டு விட்டு எழுதுவர்.

. ஒரு வாரத்திற்கு எங்களுக்கு என்ன தேவைப்படுகிறது?

அரை மணி நேர சமூக நாடகம்.
அரை மணி நேர மர்ம நாடகம்.
அரை மணி நேர இலக்கிய நாடகம்.
கால் மணி நேர காட்சியும் கானமும்.
கால் மணி நேர சிறுகதை.
நகைச்சுவைச் சித்திரம், கதம்ப மாலை உண்டு.
இளையர் சமுதாயம், குடும்ப விளக்கு, இலக்கியச் சோலை எல்லாம்
magazine வகை நிகழ்ச்சிகள்.

கால் மணி நேர இலக்கியப் பேச்சு.
ஐநது நிமிட எளிய தமிழ். வாரத்திற்கு ஆறு முறை.
கல்வி புகட்டும் நிகழ்சசிகள், தகவல் தரும் நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
என்று இவற்றை வகைப்படுத்தலாம்.
பொழுதுபோக்கிக் களிப்பூட்டும் நிகழ்சசிகள் 60 சதவிகிதம்.
மற்றவை 40 சதவிகிதம்.

. உதாரணத்திற்கு 1982 ஜனவரி:

10 சிறுகதைகள் கிடைத்தன. பத்துப் பேர் எழுதினர். 7 பேர் மலேசியாவிலிருந்தும் 3 பேர்
சிங்கப்பூரிலிருந்தும் கதைகளை அனுப்பியிருந்தனர்.

3 நாடகங்கள் வந்தன. 3 பேர் எழுதினர். மலேசியாவிலிருந்து 1. சிங்கப்பூரிலிருந்து 2.

கிடைத்த மொத்த எழுத்துப் படைப்புகள் 250. மலேசியாவிலிருந்து 60 சதவிகிதம். சிங்கப்பூரிலிருந்து 40 சதவிகிதம்.

Rate of Acceptance. ஏற்பு விகிதம் சிங்கப்பூர் 60 விழுக்காடு. மலேசியா 40 விழுக்காடு.
மலேசியப் படைப்புகளில் முதிர்ச்சி (maturity) குறைவு.

எங்கிருந்து எதை ஏற்க வேண்டும் என்பதற்கு அதிகாரபூர்வ நிலை எதுவும் கிடையாது. எல்லாம் சிங்கப்பூர்ப் பின்னணியை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

. தொலைக்காட்சிப் படங்கள் இறக்குமதி ஆகின்றன. நன்றாக இருக்கின்றனவா என்பதைப் பொறுத்தே அவை கொண்டுவரப்படுகின்றன.

. தேசிய தின நாடகம் உள்ளூர்ப் படைப்பாக இருக்க வேண்டும்.

. மற்றபடி எந்த நாட்டிலிருந்தும் எதையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதை சிங்கப்பூருக்கு ஏற்ப modify செய் என்பது சிங்கப்பூர்க் கொள்கை.
உதாரணத்திற்கு, கங்காணி கொடுமையால் கஷ்டப்படுவதையும், மலாய் தெரியாமல் குடும்பத் தலைவர் பதவி இழந்து கோலாலம்பூர் தெருவில் அல்லற்படுவதையும் இங்குக் காட்ட முடியாது.

. பார்க்கப்போனால் சிங்கப்பூரிலிருந்து எழுதுவதற்கு எதுவுமே இல்லை எனலாம். கதைக்கரு கிடைக்காது. எல்லாம் flat. பக்கத்துவீட்டில் சீனர். சீனருடன் நல்ல அண்டைவீட்டு நட்பைக் காட்டலாம். இது மட்டுந்தான். Housing estate-ல் வேறு என்ன எதிர்பார்ப்பது? தொழிலாளிகளைப் பற்றிக் கொஞ்சம் தொட்டுப் பேசலாம்.

. நகர வாழ்க்கை. 24 மணி நேரமும் பகல்/விளக்கு வெளிச்சம். இருட்டு இல்லாமல் மர்மத்திற்கே இடமில்லை இப்போது.

யார் வானொலி கேட்கிறார்கள்?

. Professionals. படித்த கூட்டம். அவர்களுக்குத் தேவைப்படுவது கர்னாடக இசையும் semi classical பாட்டும்.

. 15 முதல் 20 வயது: ஒரு பிரிவினர் TMS வகைப் பாடல்களை ரசிப்பர். மற்றொரு பிரிவினர் காம இச்சைப் பாடல்களைக் கேட்கப் பிரியப்படுவர் (sexy and lewd songs).

. திரைப்பாடல்களுக்குத்தான் எப்போதும் மவுசு. உள்ளூர்ப் பாடல்கள் எல்லாம் அப்புறந்தான்.

. இந்த மாதம் (ஜுன்) முதல் வானொலி ஒலிபரப்பு நேரம் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை.

. Feedback
கடிதங்கள் அனுப்பி நிறை குறைகளைச் சொல்கிறார்கள்.

. வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று மக்கள் ஆசைப்படுகிறார்கள். தொலைபேசி விருப்பத்தில் நிறைய பங்கேற்கிறார்கள்.

. 1981 ஜுலை மாதத்திலிருந்து பார்த்தால்
பொன் சுந்தரராசு,
நா கோவிந்தசாமி,
வீரப்பன் லட்சுமி,
பரணன்,
க து மு இக்பால்,
ந பழனிவேலு,
கமலாதேவி அரவிந்தன்
முதலானோர் வானொலிக்கு நிறைய எழுதியவர்கள் என்று சொல்லலாம்.

. மலேசியாவிலிருந்து
லட்சுமணன்,
P S சுப்பிரமணியம்,
சக்கரவர்த்தி சுப்பிரமணியம்,
ஆர் கிருஷ்ணன்,
பால்ராஜ்,
அஞ்சலை
முதலானோர் அதிகம் எழுதினர்.

. மக்களுக்குத் தெரிந்த எழுத்தாளர் என்றால் அவர் வானொலி மூலம் வந்தவர் என்று நிச்சயம் சொல்ல முடியும். எழுத்துப் படியைத் திருத்திப் பணமும் கொடுக்கும் ஊடகம் வானொலியைத் தவிர வேறு எதுவும் இல்லை.



இலக்கியக் களம்

இலக்கியக் கள மதிப்பீட்டை தமிழ்நாட்டுக்கு ஏன் அனுப்ப வேண்டும்?

சிங்கப்பூரில் ஏன் இலக்கியம் வளரவில்லை? புதுப்புது எழுத்தாளர்கள் ஏன் தோன்றவில்லை? ஆராய்ச்சி செய்து இதற்கான காரணங்களைப் பார்க்கவேண்டும்.

இங்குள்ள மலேசிய எழுத்தாளரை தமிழ்நாடு மதிப்பீடு செய்வதில்லை.

நல்ல படைப்பிலக்கியத்திற்கு அனைத்துலக கால, தேச எல்லை கிடையாது. இலக்கியத்தை ரசிக்க வேண்டுமானால் அடிப்படைச் சூழலை அறியவேண்டும். நீதிபதிகள் international theme-மை முக்கியமாகத் தேர்வு செய்வார்கள்.

இலக்கியக் கள விமர்சகர்கள் இந்நாட்டுச் சூழலைத் தொட்டு எழுதிய கதைகளைச் சிறப்பாகக் கருதவில்லை.

We don't recognise our own talents?
இங்குள்ளவர் ஏன் விமர்சனம் செய்யக்கூடாது?

சிங்கப்பூரில் அமைந்த இலக்கியக் களம் ஏன் மலேசியக் கதைகளைப் போடவேண்டும்? 15 வயது மாணவனுக்கு மலேசியா தெரியாது. இவன் இங்கே பார்ப்பது வேகமான கார், உயர்ந்த கட்டடம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை கதைகளும் தமிழ் நேசன், தமிழ் முரசு பத்திரிகைகளில் வந்தவை. வானொலி கதை இல்லையா?

இலக்கியக் களம் போட்ட கதைகளின் தொகுப்பு நூல் புதுமையானதா? இல்லை. எல்லாம் ஏற்கனவே வந்த கதைகளின் மறுபதிப்புதான். It is a waste of time.

வருங்காலத் திட்டங்கள்?

. SBC மூலம் தரமான சிறுகதைகளையும் நாடகங்களையும் படைக்கவேண்டும்.

. ஒரு சொல் கேளீர் எனும் நிகழ்ச்சியைக் கேட்டிருப்பீர்கள்.
T S மோகனம் எழுதித் தயாரிப்பது அது. தமிழ் முரசு ஞாயிறு தோறும் அதை எடுத்துப் போடுகிறது. இந்த மாதிரி ஆய்வு இதற்குமுன் வந்ததில்லை.

. 1981 நவம்பரில் எழுத்தாளர்களைக் கூட்டிக் கலந்துரையாடல் நடத்தினோம். வானொலிக்கு அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை எடுத்துச் சொல்வதே அதன் நோக்கம்.
Radio is not an institution அதாவது வானொலி ஒரு பயிற்சிப் பள்ளி அல்ல என்பதைத் தெளிவாக விளக்கினோம். இலக்கியம் வளர துணை செய்ய முடியும். வகுப்புகள் நடத்த முடியாது. எங்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டோம்.
40 பேருக்கு அழைப்பு விடுத்தோம். 25 பேர் மட்டும் வந்தனர்.

Sunday, September 13, 2009

சந்திப்பு 3: நா. கோவிந்தசாமி (Naa Govindasamy)



உலக அரங்கில் சிங்கப்பூரின் தமிழ் முகமாகத் திகழ்ந்த நா. கோவிந்தசாமி 26 மே 1999ல் திடீரென்று காலமானார். 1946 ஏப்ரல் 14ல் பிறந்தவர். அசல் சிங்கப்பூரர். தமிழுக்காக தமிழ் பேசும் பகுதிகள் எல்லாவற்றையும் சுற்றியவர். தமிழ்க் கணினியின் தந்தை என்றெல்லாம் போற்றப்படுவதற்கு முன்னரே அவரை 1982 மே 3ல் கல்விக்கழக அலுவலகத்தில் சந்தித்தேன். மாலை நாலரை மணிமுதல் இரவு எட்டரை மணிவரை நாங்கள் பேசினோம்.



. சிங்கப்பூரின் சுதந்தரத்திற்குப் பிறகு எழுத்தாளர்களிடம் ஒரு குழப்ப நிலை. ஏனெனில் 1963ல் மலேசியாவில் இணைந்தபோது உடனே மலேசிய உணர்வு. மலேசியாவை எதிர்த்த இந்தோனேசியா மீது போர்ப்பரணி பாடினார்கள் நம் கவிஞர்கள். மக்கள், எழுத்தாளர்கள் எல்லாரிடமும் இந்த உணர்வு தென்பட்டது.

. 1965ல் பிரிவினை. புதிய சூழலுக்கேற்ப சரிசெய்யும் போக்கு தேவை. 1965லிருந்து 1968/69 வரை மூன்று நான்கு வருஷம் எங்கே நிற்கிறோம் என்ற எண்ணமில்லை. அரசியல் தலைவர்களும் பிரிவினை தற்காலிகந்தான் என்ற சிந்தனையில் செயல்பட்டார்கள். இதன் பாதிப்பு மக்களிடமும் எழுத்தாளர்களிடமும் படிந்தது.

. அரசியல் தலைவர்கள் சிலர் மலேசியாவிலிருந்து வந்தவர்கள். ராஜரத்னம், தோ சின் சை, தேவன் நாயர் போன்றவர்கள். தமிழர்களும் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் மலேசியாவிலிருந்து வந்தவர்கள். ஒரு வகையான குழப்ப நிலை.

. 1965 பிரிவினைக்குப் பிறகு 1966 ஆகஸ்ட் 9ல் முதல் சுதந்தர தினம். சிங்கப்பூர் வாழ்த்துப்பா பாடினார்கள் நம் கவிஞர்கள். ஆகஸ்ட் 31 வந்ததும் அதே எழுத்தாளர் மலேசிய வாழ்த்துப் பாடினார். நான்கு வருஷம் இந்த நிலை.

. பத்திரிகைகளுக்கும் இதே குழப்ப நிலைதான். தமிழ் மலர் 1964ல் இங்கு தோன்றியது. மலேசியாவில் அச்சடிப்பு. அவர்களும் அதை வளர்த்தார்கள். எழுத்தாளர்களைக் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் அப்படிப்பட்ட அரசியல் சூழ்நிலை. சே வெ சண்முகம் போன்றோர் இத்தவற்றைப் புரிந்தனர்.

. தமிழ் முரசுக்கும் இந்த நிலைதான். மலேசியாவில் பத்திரிகை உண்டு. பிரிவினை பற்றி கோ சா தலையங்கம் எழுதினார். மக்களைக் கேட்டு இணைந்தார்கள் மக்களைக் கேட்காமலே பிரிந்தார்கள் என்று.

. 1970க்குப் பிறகுதான் சிங்கப்பூர்த் தனித்தன்மை வேரூன்றத் தொடங்கியது. சிங்கப்பூர் மயமான இலக்கியம் ரேடியோவில் எழுந்தது. வானொலி அரசு இயந்திரம். கா பெருமாள் சிங்கப்பூர்ப் பாடல்கள் இயற்றினார். நூல் வந்தது. நாட்டுப்பற்றுப் பாடல் வந்தது.

. வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் சிங்கப்பூரைத் தனியாகக் காட்டவேண்டிய கட்டாய சூழல். மலேசியாவிலிருந்து வந்த மு தங்கராசு போன்றோர் Reality of separation என்ன என்று என்பதை உணர்ந்தனர்.

. தேசியதினம் வந்துவிட்டால் நாடகம், பாடல், கவிதை, கவியரங்கம் எல்லாம் சிங்கப்பூரைப் பற்றியே. Survival after பிரிவினை. இப்ப அரசாங்கம் கலைவிழா நடத்துகிறது. நாடகப் போட்டிக்கு $ 3000 வெள்ளி பரிசு. Singa ஏடும் வருகிறது. அதற்கு முன்பு சிறுகதை நாடகப் போட்டிகள் தேசிய அளவில் நடந்தன. 1974க்குப் பிறகு நான்கு மொழிகளிலும் போட்டி ஆரம்பித்தது. சிங்கப்பூரர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இரண்டு சிறுகதைப் போட்டிகள் நடந்துள்ளன.

. வானொலியிலும் போட்டிகள். தற்போதைய சூழலில் படைக்க வேண்டும். அ முருகையன் நல்ல குடும்பம் படைத்தார்.

. தமிழ் முரசும் இப்படி செய்தது. அதன் முரசொலி பகுதி மாதந்தோறும் விட்டு விட்டு வரும்.

. கடந்த 3 வருஷமா நல்ல எழுத்தாளர் யாரும் முரசில் எழுதுவதில்லை. முரசு எப்போதுமே எழுத்துக்குக் காசு கொடுப்பதில்லை. (சிங்கப்பூர் மலேசியாப் பத்திரிகைகள் எல்லாமே இப்படித்தான்.) ரேடியோவில் சிறுகதைக்கு 55 வெள்ளி தருகிறார்கள். புது ஆட்கள் மட்டுமே முரசுக்கு எழுதுவார்கள். பழையவரை அங்கீகாரம் பண்ணுவதில்லை. தமிழ் முரசு செல்வாக்கு இழந்துவிட்டது. இதுவும் ஒரு காரணம்.

. 1975க்குப் பிறகு சிங்கப்பூர்ப் பற்று வலுத்துவிட்டது.

. கவிஞர்= பாடுபொருள் சிங்கப்பூர் என்றாலும் தமிழ்நாட்டுக் கவிஞர் மலேசியக் கவிஞர் போலவே எழுதவேண்டும் என்ற ஆர்வம். அவர்களே முன்மாதிரி.

. புதுக்கவிஞர்கள்= இளங்கோவன் முனைப்பாக இருக்கிறார். ஆங்கிலக் கல்வி பலம். சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர். 24 வயது.

. சிறுகதை எழுத்தாளர்கள்= ஆசிரியர்கள், நல்ல வேலையில் உள்ளவர்கள் எழுதுகிறார்கள். புது எழுத்தாளர்களும் உண்டு.

. நாவல்துறை வளரவில்லை.

தற்போதைய எழுத்தாளர்கள்.
கவிஞர்கள்= பரணன், முத்தமிழன், இக்பால், முல்லைவாணன், அமலதாசன், வனம், ந பழனிவேலு, பெரி நீல பழநிவேலன், இளமாறன்.

புனைகதை= சே வெ சண்முகம், மா இளங்கண்ணன், இராம கண்ணபிரான், ஏ பி சண்முகம், சுந்தரராசு, ந பழனிவேலு, நா கோவிந்தசாமி.

Journalist: சர்மா, மெ சிதம்பரம், எஸ் எஸ் மைதீன்.

ரேடியோ= சே வெ சண்முகம் (நாடகம், சிறுகதை)
நா கோவிந்தசாமி (நாடகம், சிறுகதை, கட்டுரை)
பொன் சுந்தரராசு (நாடகம், சிறுகதை)
வீரப்பன் லட்சுமி (நாடகம்)
கிருஷ்ணன், எம் கே நாராயணன், சந்திரன், பன்னீர்செல்வம், கலைச்செல்வன்.

. மலேசிய இலக்கியத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
அநேகர் மலேசியாவில் உள்ளனர். சிங்கப்பூரில் ஒரு சிலரே.
ஒன்று கொடுத்தாலும் நாங்கள் தரமாகக் கொடுக்கிறோம். அளவைவிட தரம் முக்கியம். அங்கீகாரம் கிடைக்கவில்லை. பவுன் பரிசு மட்டும் அங்கீகாரம் இல்லை. மாற்றாந்தாய் மனப்பான்மை உண்டு அங்கு. மலேசியப் பத்திரிகைகளில் வருவது பெருமை என்று நினைத்த காலம் இருந்தது. இப்ப இல்லை. சிங்கப்பூர் இலக்கியம் மலேசியாவின் ஒரு பகுதி எனவே 1963 வரை இருந்தது.

. உதாரணம் மா இளங்கண்ணன். பவுன் பரிசு வாங்கவேண்டும் என்று விடாப்பிடியாக எழுதினார். மலேசியத் திறனாய்வாளர்கள் பவுன் பரிசு வட்டத்தையே பெரிதாக நம்புகிறார்கள்.

. மலேசியத் தமிழ் இலக்கியத்தை உயர்வாகவே கருதுகிறோம். ஒரு தாய்க்குக் கொடுக்கும் மரியாதை உண்டு.

. சிறுகதை எழுத்தாளர்கள் எல்லாரும் சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்கள் அல்லது நிரந்தரமாக வசிப்பவர்கள்.

. கவிஞர்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. வாழும் கூட்டிலிருந்து வெளியே வரமாட்டேன் என்கிறார்கள். குடும்பம் தமிழ்நாட்டில். இரண்டு வருஷம் இருந்துவிட்டு ஊருக்குப் போவார்கள் சிலர். தொழில் IMG group (உடலுழைப்பு தொழிற்சாலை ஊழியர்கள்). பெரும்பாலும் அவர்களுக்கு ஆங்கிலப் பின்னணி கிடையாது. சிலர் விதிவிலக்கு. உதாரணம் இக்குவனம், இக்பால்.

. புனைகதை எழுத்தாளர்கள் கவிஞர்களை அதிகம் மதிப்பதில்லை. கவிஞர்கள் இந்நாட்டை அதிகம் அறிய விரும்பவில்லை என்பதும் சிங்கப்பூரின் பண்புகள் வளர்ச்சி ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என்பதும் புனைகதை எழுத்தாளர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டு. நவீன சிங்கப்பூரின் பண்புகளைக் காட்டுவதில் புனைகதை எழுத்தாளர்கள் திறமையாகச் செயல்படுகிறார்கள்.

. 1965லிருந்து சிறுகதை, நாவல், நாடகம் என எல்லா வகைகளிலும் 40க்கும் அதிகமான நூல்கள் வெளிவந்துள்ளன.

. ஏ பி சண்முகம் முடிதிருத்தும் தொழிலர். இந்தியத் தொடர்பு கொண்டவர். கப்பல் பயணத் தமிழர். அதிகமான புத்தகங்களைப் போட்டிருக்கிறார். மா இளங்கண்ணனும் நிறைய நூல்கள் வெளியிட்டிருக்கிறார். உள்ளூர் themes அதிகம் உண்டு.

. 300 படிகள் விற்றாலே பெரிய சாதனை.

. சிங்கப்பூரில் இலக்கிய எதிர்காலம்.
ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம் உண்டு. உயர்நிலைப்பள்ளிகளில் மட்டும் நாற்பதுக்கும் அதிகம். ஆசிரியர் உற்சாகம் காட்டுவதில்லை. ஆசிரியத் தொழில் சார்ந்த எழுத்தாளர்கள் மிகக் குறைவு.

. மரபுக் கவிஞர்கள் புதிதாக உருவாகும் சூழ்நிலை இல்லை. ஒருவர் பரணனிடம் பயிற்சி பெறுகிறார். தொழில் நிபுணத்துவர்கள் எழுத்துத்துறைக்கு வருவது கிடையாது.

. சிங்கப்பூர்த் தமிழில் இலக்கண சுத்தம் கூடுதலாகத் தென்படும். நல்ல தமிழ் எழுதவேண்டும் என்ற எண்ணம் மிகுதியாக உண்டு.

. தற்போதைய கல்வித்திட்டத்தில் PreU வரை இரண்டாம் மொழி கட்டாயம். இந்தத் தமிழை வைத்து அவர்கள் continue பண்ணுவார்களா என்பது பிரச்னை.

. அரசாங்கம் ஆண்டுக்கு ஒரு தடவை நாடக விழா நடத்துகிறது. சே வெ சண்முகத்தின் சின்னஞ் சிறுசுகள், சர்மாவின் இரு நாடகங்கள், தழுவல் செய்யப்பட்ட இலங்கை நாடகம் இடம்பெற்றன.

. 1977லிருந்து சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் இருந்து வருகிறது.

இலக்கியக் களம்.

இது 1976 டிசம்பரில் வித்திடப்பட்டது. நான் 1974 டிசம்பர் தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது நடைபெற்ற இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். இரா மோகன், சு வேங்கடராமன், அ கண்ணன் ஆகியோருடன் நான் போனேன். அந்தக் கூட்டத்தில் ஜெயகாந்தனின் சக்கரம் நிற்பதில்லை கதைக்குப் பரிசு வழங்கப்பட்டது. பரிசளிப்புக்குப் பிறகு நாங்கள் பேசிக்கொணடிருந்தபோது ஓர் எண்ணம் உதித்தது. ரெ கார்த்திகேசு, அகிலன் ஆகியோரைத் தமிழ்ப் புத்தகாலயத்தில் சந்தித்தேன்.

1975 ஜுனில் அகிலன் இங்கே வந்திருந்தபோது என்னுடன் தங்கினார். அவர் அபார ஊக்கம் கொடுத்தார். நல்ல இலக்கியம் வளர்வதற்கு தரமான வாசகர் கூட்டம் அவசியம் என்பதை அகிலன் வற்புறுத்திச் சொன்னார். நல்ல விஷயத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்து ரசித்து விமர்சனம் செய்வது ஒரு நல்ல வாசகரின் இயல்பான பண்பு என்றார் அவர். அவருடைய தூண்டுதல் அதிகமாக இருந்தது.

பிறகு 1975 இறுதியில் தி ஜானகிராமன் சிங்கப்பூர் வந்தார். பேசியபோது கருத்து சொன்னார். படிப்படியாக வாசகர் கூட்டத்தை உருவாக்கினால்தான் இலக்கியம் வளரும் என்று அவரும் எடுத்துச் சொன்னார். தரமறிந்து படிக்கும் வாசகர் கூட்டம் இல்லையென்றால் இலக்கியத்தை ரசிக்கவும் முடியாது வளர்க்கவும் முடியாது என்று ஜானகிராமன் ஆணித்தரமாகக் கூறினார்.
பெரும்பாலும் வாசகர்கள் ஆழமான கதைகளைப் படிப்பதில்லை என்றாலும அதற்காக மனம் சோர்ந்துவிடக்கூடாது என்பதை அவர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூர் தமிழ் மலரில் எனக்கு ஒரு column இருந்தது. 1976 ஜுன் மாதம் முதற் கொண்டு எண்ண அதிர்வுகள் என்ற தலைப்பில் சுமார் ஓராண்டுக்கு எழுதி வந்தேன். வாசகர் தரத்தை எப்படி வளர்க்கலாம் என்பது பற்றி என் கருத்தை வெளியிட்டேன். முதலிலேயே கண்ணபிரான், இளங்கண்ணன், சே வெ சண்முகம், ஏ பி சண்முகம், ந பழனிவேலு, சுந்தரர்ராசு, எஸ் எஸ் சர்மா, இளங்கோவன், உதுமான் கனி முதலான நண்பர்களுடன் கலந்து பேசினேன். முகம் தெரியாதவர்க்கு அஞ்சல் வழி அனுப்பிக் கேட்டோம்.

இலக்கியக் களம் என்று பேர் வைத்து இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை கூடி விவாதிக்கலாம் என்று முடிவு செய்தோம்.

1976 டிசம்பர் 1977 ஜனவரியில் பணி தொடங்கப்பட்டது. முதல் திறனாய்வு 1977 ஜனவரி/பிப்ரவரி கதைகளுக்கு நடந்தது. இதுவரை 1977 முடிந்து நூலாகியது. 1978 ஆண்டிறுதித் திறனாய்வை டாக்டர் தண்டாயுதம் பார்க்கிறார்.

ஒவ்வொரு திறனாய்வாளரும் 2 மாதங்களில் 4 கதைகளைத் தேர்வு செய்வார். ஓராண்டுக்கு 24 கதைகள் வரும். ஆண்டிறுதியில் ஒரு திறனாய்வாளர் 24 கதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார்.

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தேர்வாகும் 4 கதைகளில் ஒரு கதை சிறப்பானதாகத் தேர்வு செய்யப்பட்டு அதற்கு 30 வெள்ளி தரப்படும். இறுதிச் சுற்று ஆண்டுக் கதைக்கு எழுத்தாளரின் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு கேடயம் மட்டும் பரிசாக வழங்கப்படும்.

1978 அமைப்பு. டாக்டர் தண்டாயுதம் 24 கதைகளில் சிறந்த 10 அல்லது 12 கதைகளைப் பொறுக்கி எடுப்பார். 2 மாதங்களில் முதற்பரிசு பெற்றாலும் அந்தக் கதை இறுதிச் சுற்றில் இடம்பெறாமற் போகலாம்.

1977, 78, 79 ஆண்டுகளில் மலேசிய சிங்கப்பூர்க் கதைகள் யாவும் இடம்பெற்றன.

1980ல் சிங்கப்பூர்க் கதைகளை மட்டும் திறனாய்வு செய்யத் தீர்மானித்தோம். சிங்கப்பூரின் தனித்தன்மையைக் காட்ட இது உதவும். மேலும் மலேசிய இதழ்கள் கிடைப்பதும் அரிதாக இருந்தது.

சிலர் ஆரம்பம் முதற்கொண்டே மலேசியக் கதைகளைச் சேர்க்கவேண்டாம் என்று விரும்பினர். ஆனால் broader aspects-சை முன்னிட்டு சேர்த்துக் கொள்ளலாம் என்று முடிவாகியது.

முதல் நூல் செலவு. (1977ஆம் ஆண்டுக் கதைகள் 1981ல் நூலாகப் போடப்பட்டன. தமிழ்ப் புத்தகாலயம் ஏற்பாடு) சிங்கப்பூர்க் கதைகள் கொண்ட எழுத்தாளர் 5 பேர் ஆளுக்கு 50 வெள்ளி கொடுத்தனர். அச்சடிக்க செலவு 4100 ரூபாய். சுமார் 1000 வெள்ளி. எல்லாச் செலவையும் அச்சகத்துக்குக் கொடுத்துவிட்டோம். ஆயிரம் வெள்ளி முதலீட்டில் 500 வெள்ளி திரும்ப கிடைத்துவிட்டது. ஆயிரம் பிரதிகள். சிங்கப்பூர் மலேசியாவுக்கு 300 பிரதிகள் கொடுத்தோம். ஒவ்வோர் எழுத்தாளருக்கும் 3 பிரதிகள் அன்பளிப்பு. 300 பிரதிகளும் விற்று முடிந்தன.

இரண்டாவது தொகுப்புக்குத் திட்டம். மொத்தம் பத்து கதைகள் தேர்வானால் ஒவ்வொரு கதையாசிரியரிடம் சுமார் 100 வெள்ளி வாங்கவேண்டும்.

மூன்றாவது நூலும் காலம் தாழ்த்தாமல் வரும் என்ற உறுதி. மூன்று நூல் சாதனை அப்படி ஒன்றும் பெரிய சாதனை அல்ல.

இலக்கியக் களம் வெறும் தனிப்பட்ட உரையாடல் கூட்டந்தான். விளம்பரம் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது. 1981 டிசம்பரில் சிங்கப்பூரில் முதல் நூல் வெளியிட்டபோதுதான் விளம்பரம் தெரிந்தது.

எழுத்தாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. தரமான மதிப்பீட்டுடன் அச்சிடப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த நூல் பரவவேண்டும் என்பதே எங்கள் ஆசை. இதுவே முதல் குறிக்கோள்.

ஆரம்பத்தில் இரு மாதத்திற்கு ஒரு முறை தனிப்பட்ட உரையாடல்கள் நிகழ்ந்தன. 1980க்குப் பிறகு மந்தம். கதைகளை thorough ஆகப் பேசுவோம். ஒருவருக்கு ஒரு இதழ் பிரித்துக் கொடுப்போம். அவர்கள் படித்து வடிகட்டி ஐந்து கதைகளைக் கொண்டு வருவார். அவரே ஒரு தரவரிசை போட்டு விவாதிப்பார்.

இதில் தலையாய நன்மை என்னவென்றால் விவாதம் பயனுள்ளதாக இருந்ததைச் சொல்லவேண்டும். எல்லா அம்சங்களையும் அலசிப் பார்த்தோம். விவாதம் ஆழமாக இருந்தது. சில சமயம் கதையைவிடவும் விவாதம் நன்றாக இருந்தது எனலாம்.

போலி எழுத்தாளரையும் திருட்டு எழுத்தாளரையும் கண்டு ஒதுக்கினோம். உதாரணம் எல். முத்து. ஒவ்வொரு எழுத்தாளரையும் நன்கு கவனித்தோம். ஒரு கதை எழுதினாலும் தரமாய் எழுதக் கூடியவர் யார் என்று தெரிந்தது. பேருக்கு எழுதுவோர் யார் என்று புரிந்தது. இது ஒரு முக்கியமான கணிப்பு. சிறுகதையின் முழுமையான வளர்ச்சியை நேரில் ஆழமாகத் தலையிட்டு முழு ஈடுபாட்டுடன் கணிக்க முடிந்தது.

தற்போதைய கள உறுப்பினர்கள். சர்மாவைத் தவிர 8 பேரும் அப்படியே உள்ளனர்.
நா. கோவிந்தசாமி, கண்ணபிரான், இளங்கண்ணன், ஏ. பி. சண்முகம், சே. வெ. சண்முகம், பொன் சுந்தரராசு, இளங்கோவன், உதுமான் கனி.
ந. பழனிவேலு கௌரவ உறுப்பினர்.

அந்த சமயத்தில் ஒரு கூட்டத்திற்கு ஆளுக்கு 5 வெள்ளி நிர்வாகச் செலவு. ந. பழனிவேலு தவிர. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் கேடயம். இதுவரை மொத்த செலவு 1000 வெள்ளி.

கோலாலம்பூர் வெளியீட்டு விழாச் செலவு நண்பர்கள் ஏற்பு. 25 நூல்கள் அங்கு விற்றன. விலை ஒரு புத்தகம் 5 வெள்ளி.

சிறுகதையின் மூலம் அனைவரும் முதல் தடவையாக சந்தித்து உறவை வளர்த்துக் கொண்டோம். அந்தப் பிணைப்பு பொது உறவாக முகிழ்த்தது.

சிங்கப்பூர் இலக்கியத்திற்கு இலக்கியக் களம் தீவிரமாகத் தொடர்ந்து பங்காற்றும்.

எதிர்காலத் திட்டங்கள்.

1965 முதல் சிங்கப்பூரில் வந்த நூல்கள் அனைத்தையும் திரட்டி ஒரு சிறந்த நூலுக்கு 1000 வெள்ளி பரிசு தரத் திட்டம். ஒரு மதிப்பீடு evaluation நடந்து கொண்டே இருக்கிறது. இது நிச்சயம் வரும். 1982 கடைசியில் அல்லது 1983 ஆரம்பத்தில் இது நிகழும். திட்டமிட்ட தொடர்ச்சியான வளர்ச்சி இது. ஆரவாரமற்றது.

நாவல் திட்டத்தை அறிவிக்கலாம்.

புதிய எழுத்தாளர்களுக்கு உற்சாகம் தரவேண்டும். தனிப்பட்ட முறையில் அரங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். எழுத்தாளர் கதையை வாசிக்க வேண்டும். இலக்கியக் கள உறுப்பினர்கள் கதையைக் கேட்டுக் குறை நிறை சொல்வார்கள்.

ஒவ்வோர் உறுப்பினர் வீட்டில் ஒரு முறை அரங்கம் கூடுதல் வேண்டும்.

இலக்கியக் களத்தின் சாதனை என்ன?

. சிங்கப்பூர் எழுத்தாளர்கள் நெருங்கிப் பழகினோம். தொடர்பு வளர்ந்தது.

. மலேசியக் கதை சிங்கப்பூர் எழுத்தாளர் கதையுடன் ஒப்பிடப்படுகிறது. மலேசியாவைவிட சிங்கப்பூர்க் கதை மோசம் என்ற கருத்து உடைபட்டது.

. சிங்கப்பூரின் எழுத்து தமிழ்நாடு வரை செல்கிறது.

. எழுத்தாளர் யார்? எழுத்தாளரை நன்கு அடையாளம் காண முடிகிறது இப்போது. அவருடைய திறமை வெளிக்கொணரப்படுகிறது. சிங்கப்பூர்க் கதைகளின் பட்டியல் வருகிறது. யார் யார் எந்த எந்தக் கதையை எழுதுகிறார் என்ற விவரம் தெளிவாகிறது.

இலக்கியக் கள உறுப்பினர்கள் எப்படியும் இரண்டு மாதத்திற்கு ஒரு கதையாவது எழுத வேண்டும் என்று முடிவு செய்தோம். அதைச் சாதிக்க முடியவில்லை.


(இலக்கியக் கள முயற்சியை கடுமையாக எதிர்க்கிறார் எம் கே நாராயணன். அவருடைய கருத்தை சந்திப்பு 4: எம் கே நாராயணன் பதிவில் படியுங்கள்.)

Saturday, September 12, 2009

சந்திப்பு 2: வி. டி. அரசு (V. T. Arasu)



V T Arasu passed away on 5 Nov 2008 at the age of 82. He was born on 11 January 1926. He came to Singapore to work for Tamil Murasu in 1951. He stayed on. In 1958 he joined the Ministry of Culture as Press Liaison Officer. After retirement he returned to Tamil Murasu in 1989 when the only Tamil paper here was in a state of misery without a direction. Arasu managed to bring Murasu into the stable of Singapore Press Holdings, the last paper to do so.
I met him on 3 May 1982 at his office and the meeting lasted between 9 and 11 am. He expressed himself mostly in English.


தமிழ் முரசோடு நினைத்துப் பார்க்கப்படும் வி டி அரசு 82 வயதில் சென்ற ஆண்டு காலமானார். அவரை நான் 1982ல் சந்தித்தபோது அரசாங்கத்தில் பத்திரிகைத் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அவர் பேசினார்.


. Tamil papers haven't moved with time. English papers were willing to do so. No people to contribute to the weekly bilingual (of Murasu). It did not go as we intended. Tried for 3 months asking all possible writers. No response. One man is running who is not well equipped with all aspects of Indian culture and literature.

. Tamil stream schools would be extinct by 1983/84. With it the successful teaching of Tamil type schools for the past 150 years would come to an end. Before the War there were about 35 Tamil schools. They survived thanks to the compulsion of trade unions.

. Second language is compulsory now. 16 000 students are learning Tamil in primary and secondary schools, with 3000 in secondary alone. 50-60% of the Tamils offer Tamil as a second language. Chinese is not popular. The current trend is more for Tamil although Malay is a keen competitor. Parental attitude towards Tamil is very important. In this sense they are quite ignorant.

. More Malayalees are taking Tamil and excel in the language.

. Image of Tamil teacher... lazy, never improves, never interested.

. Tamil was also taught in a monolingual system. Those who went to Umar Pulavar Tamil School had to be given employment. When they passed out most of them taken as teachers.

. When all are Tamils there is no competition and the standard is not good. For example during the competitions held in conjunction with Tamil festivities Umar Pulavar students do not do well.

. There is no place for Tamil monolingual stream in Singapore.

. Middle 1950s was Secretary of Tamil Education Society. All Tamil stream education government aided. Before (Malayan) Emergency Tamil schools were run by trade unions. When the unions went underground the government stepped in.

. (Tamil Murasu editor) G Sarangapany helped. He persuaded for the schools to be amalgamated. Tamil Education Society (தமிழ்க் கல்விக் கழகம்) was initiated by him. Efforts were taken for the grouping of schools. Tried to introduce English as a language in Tamil schools.

. And the capitation grant not to be changed from one school to another.

. 110 primary schools are offering Tamil as a second language. There are 300 teachers for Tamil.

. As for the societies many of the old ones are now defunct. There are 2 organisations that are active. One is the Tamils Representative Council (TRC). TRC has taken a different character now. G. Kandasamy, Gen Secretary of AUPE, is the President. TRC is basically a confederation of many societies. It has direct membership too.

. The second is the Tamil Language and Cultural Society (TLCS). Formed only 2 years ago (1980). It was fathered by Devan Nair.(First Chairman was Arasu). It is a high powered society. The Board of Trustees is headed by Prof Jayakumar. Among the trustees are Dhanabalan, Justice Choor Singh and Bishop Duraisamy. The management council is headed by Bishop Duraisamy.

. The function of TLCS is to preserve Tamil as a living language i.e. it should be used by all. It works closely with the Ministry of Eduction to upgrade teaching of Tamil in schools. It also functions to promote Indian culture not Tamil culture. But Tamil should be the basis of Indian culture as the Tamils are 65% of the Indian community.

. But so far we haven't achieved much. organised a cultural show.

. Working on a project Tirukkural (திருக்குறள்) having in mind the need of upper secondary students. First part is to bring the message of Tirukkural through stories. It will be done in English. Second part is to select relevant Tirukkural couplets and pulish them in both Tamil and English.

As for the literary activities:
. We have Tamil Murasu, Indian Movie News and one more cinema monthly. Also the Association of Singapore Tamil Writers.

. For cultural needs there is the Singapore Indian Fine Arts Society. It is in existence for well over 20 years. The president is a North Indian merchant. The Society teaches music, dance etc. Instructors are from Kalakshetra of Madras.

. We have the Singapore Indian Artistes' Association and Tamizhavel Drama Society (தமிழவேள் நாடக மன்றம்).

. As for the National Library the Tamil members and their reading habits are not advanced. Tamil books need to be rebound in Tamilnadu. Half the money for the allocation of Tamil books has to be set aside for this rebinding work.

. On Tamil Murasu:
I was with the paper between 1951 and September 1958. 4 page paper. 6 pages on Sundays. சங்கங்களும் அவற்றின் செய்திகளும் முக்கியமாக இடம்பிடித்தன. அது ஒரு செய்திப் பத்திரிகையைப் போல நடக்கவில்லை. முரசை ஒரு முழுமையான பததிரிகை என்று சொல்ல முடியாது. Not a full fledged paper. பத்திரிகையின் போக்கை மாற்ற முயன்றேன். கோ. சா இதில் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். கட்டுரை பேர் போடாமல் எழுதுவேன். கோ சா மெஷினை நிறுத்தி பேர் போடுவார். தமிழ் நேசன் அதிகமாக விற்ற காலம் அது. பிறகுதான் 1952/53/54ல் முரசின் விற்பனை கூடியது.

என்னுடன் தேவராஜன், சி. வீ. குப்புசாமி, ரெ. சீனிவாசன் முதலானோர் இருந்தனர். மலாயா நண்பனில் வேலை செய்த மெ. சிதம்பரத்தை நான் முரசுக்குக் கொண்டு வந்தேன். பின்னர் அ. முருகையன், முருகு சுப்பிரமணியன் வந்து சேர்ந்தனர்.

Indian Daily Mail பத்திரிகையும் நடந்து கொண்டிருந்தது.

எல்லாம் team work. பத்திரிகையை நன்றாக நடத்த பெருமுயற்சி எடுத்துக்கொண்டோம். மலாயா இந்தியர் காங்கிரசின் (மஇகா) செய்தியை கோ. சா போடமாட்டார். நாங்கள் அந்தச் செய்தியைப் போட்டோம். மஇகாவின் தலைவர் தேவாசரைசத் திட்டி கோ. சா தலையங்கம் எழுதினார்.

ரசனை வகுப்பு எழுத்தாளர் பேரவையாக முகிழ்த்தது. வரும் கதைகளை எல்லாம் திறனாய்வு முறையில் விமர்சனம் செய்தோம்.

தலையங்கம் எழுதியிருக்கிறேன் நான். எதிரொலி பகுதி என்னால் ஆரம்பிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையில் பூந்தோட்டம் என்ற பகுதியை ஆரம்பித்து தும்பி எனும் புனைபெயரில் எழுதினேன்.

அ. முருகையன் சிறுகதைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். முருகு என்ற பெயரில் வாரந்தோறும் கதை எழுதியவர் முருகையன்தான். (பலர் முருகு சுப்பிரமணியன் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரம் அது.)

பத்திரிகையில் தலைப்புகள் கவர்ச்சியாக இருக்கவேண்டும்.

1955ல் தேர்தல் வருவதை முன்னிட்டு ஓராண்டுக்கு முன்னதாகவே இந்தியர்கள் அதிக அளவில் குடியுரிமை பெறவேண்டும் என்று கோ. சா விரும்பினார். முரசு பெரும்பாடுபட்டது. தனியாக ஓர் அலுவலகம் திறந்தது. விளம்பரம் செய்தோம். கூட்டம் நடத்தினோம். முரசு தலையங்கம் எழுதியது. மக்கள் வந்து அடையாளக் கார்டைக் காட்டினால் போதும். மற்ற வேலைகளை அலுவலகம் பார்த்துக்கொண்டது. கூட்டம் கூட்டமாக வந்து குடியரிமைக்கு மனு செய்தார்கள் இந்தியர்கள்.

அத்தகைய ஒரு குடிமையுணர்வு இன்றைய தமிழ் முரசிடம் இல்லை. அன்று ஒவ்வொருவரும சமுதாய உணர்வோடு செயல்பட்டனர். திருவிழாக்களுக்கும் கலியாணம் முதலான நிகழ்ச்சிகளுக்கும் முரசு ஆசிரியர்கள் சென்று வருவார்கள். அவற்றில் பேசுவார்கள். மக்களோடு கலந்து உறவாடுவார்கள்.

குடிநுழைவு 1953 வரை தொடர்ந்தது.

1954ல் தமிழ் முரசில் இந்தியா செய்திகள் மிகமிகக் குறைவு. இலக்கிய பண்பாட்டுச் செய்திகள்தான் அதிகம். அரசியல் விவகாரங்களில் சிக்கிக் கொள்வது கிடையாது. இதனால் வாசகர்களின் நம்பிக்கை முரசுக்கு முழுமையாகக் கிடைத்தது. அதிலும் அண்மைக் குடிநுழைவாளர்கள் எல்லாம் இளையர். நன்கு படித்தவர்கள். தமிழ் உணரச்சி அதிகம் கொண்டவர்கள். உள்நாட்டு இளையரும் முரசைத் தீவிரமாக ஆதரித்தர்கள்.

தமிழ் எங்கள் உயிர் நிதி, மலாயாப் பல்கலைக்கழக இந்திய நூலக அமைப்பு, தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் இளையர் கூட்டத்தை முரசின் பக்கம் ஈர்த்தன.

If we look back Tamil Murasu was charismatic.

கோ. சாவுக்கு தலைமைத்துவம் வாய்த்தது. நம் தமிழ் கூலிக்காரன் தமிழா இருக்கக்கூடாது என்பார். தமிழர்களின் முன்னேற்றத்துக்கு வேலை செய்யவேண்டும் என்பார். குடியும் குடித்தனமுமாக செழுமையா வாழவேண்டும் என்பார். முழுக்க முழுக்க ஒரு சிங்கப்பூர் தேசியவாதி போல கோ சா செயல்பட்டார்.

தமிழ் நேசன் எப்போதுமே தமிழ் முரசுக்குப் போட்டியாக இருந்தது கிடையாது. நேசனின் போக்கிற்கு முரசு என்றுமே ஆட்பட்டது இல்லை.

இந்து திருமணச் சட்டத்தை முரசு ஆதரித்தது. சீர்திருத்த மணத்தையும் அது வரவேற்றது. பிரிட்டிஷ் ஆட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சி. ஆர். தசரதராஜ் மசோதா கொண்டு வந்தார். வேண்டாத அம்சங்களை முரசு எதிர்த்துப் போராடியது.

1947ல் பூந்தோட்டம் என்ற இதழை சேலத்தில் நடத்திக் கொண்டிருந்தேன் நான். பத்து இதழ்கள் வரை இழுத்தேன். மாத இதழ். சமூக இலக்கிய அரசியல் விஷயங்கள் எல்லாம் உண்டு. தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆயிரம் படிகள் முதலில் போனது. கடைசியில் ஐயாயிரம் படிகள் வரை சென்றது. அச்சடிப்பு அனுமதியில் கட்டுப்பாடு வந்ததால் நிறுத்த வேண்டியதாயிற்று.

தமிழக மாநில திராவிட மாணவர் கழகத்திற்குத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். தலைவர் ஈ வே கி சம்பத்.

சேலத்தில் சி பா ஆதித்தன் நடத்தி வந்த தினத்தாள் நாளிதழில் சேர்ந்தேன். உதவி ஆசிரியர் வேலை. பிறகு செய்தி ஆசிரியராக உயர்ந்தேன். மூன்றே மாதத்தில் பொறுப்பு ஆசிரியர் ஆனேன். அங்கு 13 உதவி ஆசிரியர்கள் இருந்தார்கள். என்னைத் தவிர எல்லாரும் பிராமணர்கள். ஒரு நாள் செய்தி ஆசிரியர் வேலையைப் பார்த்தபோது ஆதித்தன் என்னை செய்தி ஆசிரியராகவே பணியாற்றும்படி கூறிவிட்டார்.

1948ல் மகாத்மா காந்தி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஒரு வட்டார நாளிதழில் காந்தியைப் பற்றி உடனே தலையங்கம் எழுதியது நான்தான். காந்தியை யார் சுட்டது என்று உடனே தெளிவாகவில்லை. அதனால் சமூகக் கலவரம் தலைதூக்கியது. சேலத்திலும் கலகம். முஸ்லிம்கள் மீது இந்துக்களின் கோபம் பாய்ந்தது. ஆனால் உண்மை நிலவரம் தெரிந்ததும் காந்தியைக் கொன்றவன் கொழுத்த பார்ப்பான் என்று தலைப்புச் செய்தி போட்டுப் பத்திரிகையைக் கொண்டு வந்தேன். இனக் கலவரத்தை நிறுத்த வேண்டும் என்பதே என் முதல் நோக்கம்.

இரண்டு வருஷம் ஓடியது. 10 முதல் 12 ஆயிரம் பிரதிகள் விற்றது தினத்தாள். அங்கே உதவி ஆசிரியருக்கு மாத சம்பளம் 60 ரூபாய். செய்தி ஆசிரியருக்கு 80 ரூபாய் சம்பளம். ஒரு நல்ல பள்ளி ஆசிரியர் 45 ரூபாய்தான் சம்பளம் வாங்கிய காலம் அது.

என்னை திருச்சிக்குப் பத்திரிகை நிர்வாகியாக அனுப்பி வைத்தார்கள். 150 ரூபாய் சம்பளம் கேட்டேன். ஆதித்தன் கொடுக்க மறுத்துவிட்டார்.

ஒரு நாள் நெ. து. சுந்தரவடிவேலு அவர்களைப் பார்க்கப் போனேன். (அவர் திராவிட இயக்கம் சார்ந்த கல்வியாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி வரை உயர்ந்தவர்.) ஐயா (பெரியார் ஈ வே ரா) என்னைப் பார்க்க விரும்புவதாக சொன்னார் அவர்.

என்னைப் பார்த்துப் பேச குத்தூசி குருசாமியை பெரியார் திருச்சிக்கு அனுப்பி வைத்தார்.
நான் விடுதலை -க்குப் போனேன். உதவி ஆசிரியராக வேலை செய்தேன். 4 பக்க பத்திரிகை விடுதலை.

ஒரு நாள் குருசாமி என்னிடம் சிங்கப்பூருக்குப் போகிறாயா என்று கேட்டார். கோ சா நடத்தும் தமிழ் முரசுக்கு ஆள் தேவை என்றார். நானும் துணிந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டு விட்டேன்.
(கோ சா முரசுக்கு வருமாறு குருசாமியைத்தான் கேட்டார் என்றும் குருசாமிக்கு வர விருப்பம் இல்லாததால் அவர் அரசுவை அனுப்பி வைத்தார் என்றும் ஒரு தகவல்.)

Friday, September 11, 2009

சந்திப்பு 1. ந. பழனிவேல் ( N. Palanivelu )



சிங்கப்பூரின் முதுபெரும் எழுத்தாளர் காலஞ்சென்ற திரு ந. பழனிவேல் அவர்கள். தமிழ்நாட்டின் சிக்கல் அவர் பிறந்த ஊர். பிறந்த தேதி 20 ஜுன் 1908. 92 வயதில் 2000ல் காலமானார். அவரை நான் 1982 மே 5ம் தேதி தோ பாயோவில் அவருடைய வீட்டில் சந்தித்தேன். காலை 11 மணி முதல் பிற்பகல் 2.15 வரை சந்திப்பு சுவையாகவும் விறுவிறுப்பாகவும் போனது. அன்றைய குறிப்பிலிருந்து இப்போது எழுதுகிறேன். அவர் தொடர்பான செய்திகளை நன்றாக ஞாபகத்தில் வைத்திருந்தார். சண்முகவடிவேல் என்பது அவரது இயற்பெயர்.

. 13 ஜுன் 1928ல் ரஜுலா கப்பல் ஏறி வந்தேன். அப்போது வயது இருபது. நேராக சிங்கப்பூருக்கு வரவில்லை. முதலில் தெலுக் ஆன்சனுக்குப் பக்கத்தில் உள்ள பாகான் பாசிர் எஸ்டேட்டுக்குப் போனேன். 1928/29ல் ஒரு வருஷம் அங்கேயிருந்தேன்.

. ஊரில் SSLC முடித்திருந்தேன். வேலை எதுவும் கிடைக்கவில்லை. அப்போ பாஸ்போர்ட் எல்லாம் கிடையாது. ஹார்பரில் விற்ற டிக்கட் வாங்கி கப்பலில் ஏறிக்கொண்டேன். டிக்கட் பத்து ரூபாய்க்குள்தான். கிளாங்கில் இறங்கினேன்.

. எஸ்டேட்டில் Check roll clerk வேலை. அப்போதுதான் தோட்டத்தில் தமிழ்ப்பள்ளிக்கூடம் கட்டி முடித்திருந்தார்கள். நான்தான் முதல் ஆசிரியர் அதில். வாத்தியார் சம்பளம் 30 வெள்ளி. கிளார்க் சம்பளம் 25 வெள்ளி. இரண்டும் சேர்ந்து 55 வெள்ளி. பெரிய சம்பளம் அது.

. 1929ல் ஈ வே ராமசாமி நாயக்கர் தெலுக்கான்சனில் கூட்டத்தில் பேசியதைக் கேட்டேன்.

. மாமா ராம. அ. ராமசாமி Banting-கில் எஸ்டேட் வைத்திருந்தார். ஜப்பான் ஆட்சிக்காலத்தில் விற்று கரன்சியாக அடுக்கி வைத்திருந்தார்.

. எஸ்டேட் வேலை 1929 ஜுலை 15ல் முடிந்தது. பிறகு வேலை இல்லை. தோட்ட வாழ்க்கையும் பிடிக்கவில்லை. 1930 ஜுன் மாதம் சிங்கப்பூருக்கு வந்தேன். டிசம்பர் 4ம் தேதி Singapore Traction கம்பெனியில் வேலைக்குப் போனேன். Wages clerk வேலை. 19 வருஷம் அங்கிருந்தேன். பிறகு 1949ல் ரேடியோ சிங்கப்பூரில் சேர்ந்தேன். 1965 வரை அங்கு வேலை பார்த்தேன். ரேடியோ சிங்கப்பூர், ரேடியோ மலேசியா, RTS என்று பேர் மாறிக்கொண்டே இருந்தது. SBC-ல் மட்டும் வேலை செய்யவில்லை.

. 1930ல் ரேடியோ இருந்தது. கிராமபோன் records பாட்டு போடுவார்கள். பிறகு 5 நிமிடம் செய்தி.

. ரேடியோவில் broadcasting assistant, producer, creative worker, news translator, news reader என்று வேலை. பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். இப்பவும் எழுதிக் கொடுக்கிறேன்.

. நான் ஏற்கனவே குடிஅரசு சந்தாதாரர். ஆனால் மலாயாவில் இருந்தவரை நான் பத்திரிகை எதுவும் பார்த்ததில்லை.

. சிங்கப்பூரில் சீர்திருத்தம், நவநீதம் இதழ்களைக் கண்டேன். அவற்றைப் படித்தபிறகு நம்மாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை தோன்றியது. தமிழர் சீர்திருத்த சங்கத்தில் சேர்நதபிறகுதான் வேகம் வந்தது. கோ.சா..தான் சரியான தூண்டுதல். தமிழ் நேசனும் அப்போது வந்துகொண்டிருந்ததது.

. கோலாலம்பூரிலிருந்து ஆர். ராமனாதன் 1932ல் சிங்கப்பூர் வந்தார். என்னுடன் தங்கினார். கதை எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதுவரை நான் கதையே எழுதியதில்லை.

. 1934ல் கிராமக் காட்சி என்ற தலைப்பில் கதை எழுதி அவருக்கு அனுப்பி வைத்தேன். இதுவே நான் எழுதிய முதல் கதை. (பாரதமித்திரன் என்ற வார இதழை ராமனாதன் கோலாலம்பூரில் நடத்தினார். பததிரிகை நடத்திய சிறுகதைப் போட்டிக்காக பழனிவேல் அனுப்பிய கதை அது. 5 வெள்ளி பரிசு கிடைத்தது. ஆனால் பரிசுப் பணம் அவருக்குக் கிடைக்கவில்லை. பரிசு அனுப்பினார்களா என்பது சந்தேகமே.)

. 1932 ல் வலிமை என்ற தலைப்பில் கவிதை எழுதி நவநீதம் இதழுக்கு அனுப்பினேன். எம். எம். புகாரி அதன் ஆசிரியர். சுமார் முப்பது பக்கம் கொண்ட ஒரு மாத இதழ் அது. தற்போதைய முத்தமிழ் இதழைப்போல. சமூக சீர்திருத்த இலக்கியப் பத்திரிகை அது.

. முன்னேற்றம் வாரப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. கோ.சா இதன் ஆசிரியர் மட்டுமே. தமிழ் முரசு ஆரம்பித்த பிறகு முன்னேற்றத்துடன் தகராறு வந்துவிட்டது கோ. சாவுக்கு.

. சீர்திருத்தம் பத்திரிகையையும் கோ. சா நடத்தினார். ஈ வே ராவின் செல்வாக்கு அடிச்சுவட்டைப் பின்பற்றி நடத்தப்பட்ட இதழ் அது.

. முதல் சிறுகதைக்குப் பிறகு எழுதிய எல்லாமே கவிதைதான்.

. சண்டைக்குப் பிறகு திராவிட முரசு வந்தது. து. லெட்சுமணன் பொறுப்பு அதற்கு. என் கதை, கட்டுரை, கவிதை எல்லாம் அதில் நிறைய வந்தது.

. ஆனந்தபோதினி என்ற சஞ்சிகைக்கு நான் ஒரு சந்தாதாரர். முனுசாமி முதலியார் நடத்தியது அது. நிறைய கதைகள் வரும் அதில். சமயம் இலக்கியம் பற்றியும் உண்டு. வடுவூர் துரைசாமி ஐயங்கார், கோதைநாயகி அம்மாள் எழுதினார்கள்.

. ஆரணி குப்புசாமி முதலியார் நடத்தியது ஜகன்மோகினி. 60 பக்கம். 8 அணா விலை. முழுக்க முழுக்க நாவலே. இதைப் படித்துப் படித்து எழுத வேண்டும் என்ற ஆசை அதிகமாகியது.

. இந்தியாவில் எதுவுமே எழுதியதில்லை. எழுத பயம். பள்ளி மாணவன். படிக்கும் ஆர்வம்.

. தசீசங்கத்திற்குக் காங்கிரஸ் பற்றுதல் கொண்டோர் எதிர்ப்புக் காட்டுவார்கள். ஒரு கூட்டத்தில் மிளகாய்த் தூள் தூவினார்கள். காண்ட்ராக்டர் ரங்கராஜன் அவர்களில் ஒருவர். சி. ஆர். தசரதராஜ் சங்கத்தை எதிர்ப்பவர். அவர் ஒரு நாளிதழ் நடத்தினார். அதில் தசீசங்கத்தைத் தாக்கி எழுதினார். அப்பத்திரிகை முதலில் வார ஏடாக இருந்து பின்னர் நாளிதழாகியது. அந்தப் பத்திரிகை 2, 3 வருஷம் நடந்திருக்கும். தமிழ் முரசுக்குப் போட்டி. அந்த ஏட்டுக்கும் நல்ல செல்வாக்கு இருந்தது. நன்றாகத்தான் ஓடியது. ஏன் நின்றது என்று தெரியவில்லை. (சி. ஆர். நரசிம்மராஜ் நடத்திய புதுயுகம் பத்திரிகையைத்தான் பழனிவேல் சொல்கிறார்.)

. தசீசங்கத்திற்கு எதிர்ப்புக் காட்டிய மற்றொருவர் கே. எஸ். அனந்தநாராயணன்.
(ஜப்பானியர் காலத்தில் நடந்த தமிழ் ஏடுகளுக்கு முதலில் ஆசிரியராக இருந்தவர். பிறகு சி. வீ. குப்புசாமி ஆசிரியரானார்.)

. நோரிஸ் ரோடில் ஆரிய சமாஜம் இருந்தது.

. 1930களில் படிக்கும் மோகம் அதிகம். ஆனந்தவிகடன் very very popular. சீர்திருத்த சங்கத் தோழர்கள் 50, 60 புஸ்தகம் வாங்கி அதைக் கொளுத்துவார்கள். தசீசங்கத்தின் நா. கிருஷ்ணசாமி இதில் முக்கியமானவர்.

. சுதேசமித்திரன், தினமணி ஆகிய தினசரிப் பத்திரிகைகளுக்கும் செல்வாக்கு அதிகம்.

. 1932ல் கலைமகள் வந்தது. தமிழ்நாடு உட்பட நான்தான் அதன் முதல் சந்தாதாரர். சந்தா நம்பர் 1. கதைகளுக்குத்தான் அது மிகவும் பிரபலம்.

. சீர்திருத்தப் போக்கு குடிஅரசு வார ஏட்டில்தான் இருந்தது. கைவல்ய சாமியார் கட்டுரை அதிகமாக வரும். கதை அறவே கிடையாது.

. கொள்கையைப் பரப்பவேண்டும் என்று கோ. சா சொன்னார். கதையாக இருந்தால் நல்லது. பத்திரிகையில் மூன்று column-த்துக்கு மேல் வரக்கூடாது. இது ஒரு வழி என்றார். இதற்குமுன் சீர்திருத்தக் கதைகள் என்று ஒரு form கிடையாது. கலைமகள், ஆனந்தவிகடன் கதைகளில் தென்பட்ட ஒரு form-மையும் கோ. சா எடுத்துச் சொன்ன சீர்திருத்தத்தையும் சேர்த்து ஒரு புதிய வடிவத்தை நான் கொடுத்தேன்.

. என் கதைகளுக்காகவே தமிழ் முரசு வாங்கியவர் உண்டு. வாரத்தில் ஒரு நாளில் கதை வரும். புதன்கிழமை கதை வரும் தினம். திங்கள், சனிக் கிழமைகளிலும் கதைகள் வருவதுண்டு.

. சிறுகதை எழுதிய மற்றவர்கள்.
ரெ. சீனிவாசன், டி. ஆறுமுகம், பக்ருதின் சாகிப், சி. வீ. குப்புசாமி. சண்டைக்கு முன்பு எல்லாமே சீர்திருத்தக்கதைகள்தான். கோ. சா ஒரு கதை கூட எழுதியது கிடையாது.

. புனைபெயர்கள். ரெ. சீனிவாசனுக்கு பிரம்மசாரி.
ந. பழனிவேலுக்கு நபர்.
கோ. சா குறும்பன் எனும் பெயரில் எழுதியிருக்கலாம்.

. அன்று தமிழ் முரசில் முக்கியமானவர்கள் கோ. சா, வை. இராஜரத்தினம்,
ரெ. சீனிவாசன், கிருஷ்ணசாமி.

. கோ. சா என்மீது மிகவும் அன்பு காட்டினார். கவிதை மலர்கள் நூலை அச்சடிக்க 1947ல் என்னை சென்னைக்கு அனுப்பிவைத்தார். எல்லாச் செலவுகளுக்கும் ரூபாய் 1,500 கொடுத்தார். நான் சென்னை போய் வந்தேன்.

. இப்ப என் கதைகளைப் படித்தால் பைத்தியக்காரத்தனமாக இருக்குது. அப்பவே நான் கடவுள் இருக்குதுன்னு சொல்லி வந்தேன். கடவுளைப் பற்றிக் கேவலமா பேச ஆரம்பிச்சாங்க. இதுவே என் எதிர்ப்புணரச்சியைத் தூண்டியது.

. நான் பார்த்த முதல் தமிழ்ப்படம் காளிதாஸ். மார்ல்பரோ தியேட்டரில் பார்த்தேன். பாட்டெல்லாம் தமிழ். வசனமெல்லாம் தெலுங்கு.

(இந்த இடத்தில் காளிதாஸ் படத்தை சிங்கப்பூரில் பார்த்த மற்றொருவரின் அனுபவத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். அவர்தாம் அ. நா. மெய்தீன்.

1931லேயே தமிழ் பேசும் படம் சிங்கப்பூருக்கு வந்துவிட்டது. திரைப்படம் பார்ப்பதற்கு டிக்கட் எடுப்பது பெரும்பாடாக இருந்தது. படம் ஆரம்பிப்பதற்குப் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பாக முட்டு மோதல்களும் அடிதடிகளும் நடக்கும். படம் முடிந்து வெளியே வருவதென்பது பெரும் சிரமமான காரியம். இங்குத் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப்படம் காளிதாஸ். ராஜலெக்ஷ்மி என்ற நடிகையும் ஒரு தெலுங்கு நடிகரும் நடித்த படம் அது. அந்தப் படம் பீச் ரோட்டிலிருந்த அல்ஹம்ரா மேடையில் திரையிடப்பட்டது. அது 3 மாதங்கள் வரை ஓடியது. அந்தப் படம் பாதி தெலுங்கு பாதி தமிழ் கலந்தது. அது மிகவும் வேகமாக ஓடிய படம். ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய அந்தப் படத்தின் கதை-- மரம் வெட்டினான் தாலி கட்டினான் என்பதுதான். மரத்துக்குமேலே இருந்து கொண்டு அடிமரத்தை வெட்டிய காளிதாஸ் இறுதியில் தாலி கட்டினான். பேசும் படத்தைப் பார்த்து நான் ஆச்சிரியப்பட்டு விட்டேன். அது பெரிய அதிசயமாக எனக்குத் தோன்றியது.
நெஞ்சில் பதிந்த நினைவுச்சுவடுகள், பக்கம் 5.)

. சிங்கப்பூரில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தார் சிங்காரம். நாடகம் மூலம் சம்பாதிக்கப் பார்த்தார். ஒரு கதை கொண்டு வந்தார். ஜானி ஆலம் ஒரு முஸ்லிம் கதை. நாடகமாக்கிக் கொடு மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதே பேரில் நாடகமாக்கினேன். 1933ல் அலெக்சாண்டிரா கூத்து மேடையில் நடந்தது. கதை பாடல் எல்லாம் நான். நன்றாக ஓடியது. காசும் வந்தது.

. இன்னொரு நாடகம். கிறிஸ்துவக் கதை இஸ்தாக்கியர். அது படு தோல்வி. வசனம் பாடல் எல்லாம் நான். நஷ்டம்.

. இதை வைத்து தசீசங்கத்தில் என்னை நாடகம் போடக் கேட்டார்கள். சங்கத்தின் நாடக சபாவுக்கு நான் தலைவர். சுகுணசுந்தரம் அல்லது ஜாதி பேதக் கொடுமை நாடகம் போட்டோம். கோ. சா இதற்கு முரசில் தலையங்கம் எழுதினார். நாடகம் நடந்த அன்றே நாடகக் கதை ஒரு சிறுகதையாகப் பிரசுரிக்கப்பட்டது முரசில்.

. கௌரி சங்கர் அல்லது கிழமணக் கொடுமை என்று மற்றொரு நாடகம். இதில் கோ. சா மேடையில் தோன்றி நடித்தார்.

. பாரதிதாசன் எழுதிய இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகத்தையும் இங்கு நடத்தினோம்.

. கதையின் பின்னணி என்ன? அன்று சிங்கப்பூரையும் தமிழ்நாட்டையும் வேறு வேறு என்று நினைக்கவே இல்லை. சிங்கப்பூர் தனிநாடு என்ற எண்ணமே தோன்றவில்லை. இரண்டும் ஒன்றுதான்.

. கதைச் சம்பவங்கள்? நான் நேரில் பார்த்தவை பிறர் சொல்லக் கேட்டவை. கொஞ்சம் கற்பனை.

. பாரதிதாசன் நிதி திரட்டுக் குழுவுக்கு நான்தான் தலைவர். தலைவருக்குப் போட்டி நடந்தது. காமுனிஸ்ட்டுத் தோழர் எஸ். ஏ. கணபதி தோல்வி கண்டார். இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் சேர்த்து அனுப்பி வைத்தோம்.

. 1938ல் சிக்கல் ஊரில் திருமணம் நிகழ்ந்தது. ஆண் மக்கள் நால்வர். பெண் மக்கள் மூவர் உளர்.

. 1934 முதல் 1960 வரை நிறைய எழுதினேன். வானொலிக்கு மட்டும் முப்பதுக்கும் அதிகமான கதைகளை வழங்கினேன். 1965ல் கடைசிக் கதை வானொலியில் வந்தது.

. பத்திரிகையில் எழுதி சம்பாதிக்க முடியாது. இதுவரை 1962ல் தமிழ் நேசனிலிருந்து ஒரு 5 வெள்ளி வந்தது முருகு ஆசிரியராய் இருந்தபோது.
அக்கரை இலக்கியத்தில் இடம்பெற்ற மலேசியாவே மலேசியாவே வா வா கவிதைக்கு 40 ரூபாய் கிடைத்தது. யுத்தம் முடிந்த கையோடு சிங்கப்பூர் ராமகிருஷ்ணா மடம் நடத்திய பாரதிதாசன் கவிதைப் போட்டியில் முதற் பரிசாக 25 வெள்ளி பெற்றேன்.


( ந. பழனிவேலின் விரிவான இலக்கியப் பணிகள் பற்றி அறிந்துகொள்ள சிங்கப்பூர் National Library இணையத் தளத்தில் Singapore Literary Pioneers தொகுப்பில் தமிழ்ப் பிரிவில் ந. பழனிவேலு எனும் பெயரில் காண்க. )