Saturday, December 18, 2010

சி வீ குப்புசாமியும், வாழ்க்கை வரலாறும், 1967ஆம் ஆண்டு மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டு விழா உரையும்


மலாயா சிங்கப்பூரில் 1930 முதல் ஐம்பதாண்டுக் காலம் தமிழ் எழுத்துலகிலும் பத்திரிகை உலகிலும் இடையறாத தொடர்பு கொண்டிருந்த ஒருவரைச் சொல்லவேண்டும் என்றால் அவர் நிச்சயம் பகுத்தறிவாளர் சி வீ குப்புசாமியாகத்தான் இருக்க முடியும். தமிழ் ஆங்கில இருமொழித் தேர்ச்சியாளர் அவர்.

1915 ஏப்ரல் 10ல் கோலாலம்பூர் செந்தூல் வட்டாரத்தில் பிறந்தவர். முதல் உலகப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். ஆயினும் மலாயாவுக்கு அதனால் நேரடி பாதிப்பு எதுவும் கிடையாது. நன்கொடை திரட்டிப் பணத்தை லண்டனுக்கு அனுப்புவதில் காலனி அரசாங்கம் மும்முரமாக இருந்தது. அன்போடும் அதிகாரத்தோடும தட்டிப் பறித்தனர் பணத்தை.

ஐந்து வயது நிரம்பியதும் மகனைத் தம்புசாமிப் பிள்ளை தமிழ்ப் பள்ளியில் சேர்ந்தார் தந்தை சி வீரப்பன். தாயார் பெயர் மு பாப்பம்மாள். மூன்றாம் வகுப்பு வரை தமிழ் படித்துவிட்டு மாக்ஸ்வெல் பள்ளியில் ஆங்கிலத்துக்கு மாறினார். ஆறேழு வருடம் அங்கு பயின்றபின் விக்டோரியா இன்ஸ்டிட்யூஷனுக்குப் போனார். அங்கு இரண்டு ஆண்டு படித்து 1932ல் சீனியர் கேம்பிரிட்ஜ் முதல் கிரேடில் தேறினார். பின்னர் தேவை கருதி இந்தியும் மலாயும் கற்றார்.

இடையிடையே தலைஞாயிறு பண்டிதர் M B சிவராமதாசர், ஸ்ரீ மனோன்மணி சுவாமியார் ஆகியோரிடம் நிகண்டு, இலக்கணம், இலக்கியம், யாப்பு முதலானவற்றைக் கற்றுக்கொண்டார். 1941-42ல் சிங்கப்பூரில் சா ச சின்னப்பனாரிடம் யாப்பிலக்கணம் பயின்றார்.

1935 முதல் 1941 வரை மலாயன் ரயில்வேயில் எழுத்தராகப் பணியாற்றியுள்ளார். அப்போது ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்குச் சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.

குறிப்பாகப் பத்திரிகைகளோடு நீங்காத தொடர்பு கொண்டவர் சிவீகு. எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், சமூகப் பிரமுகர்கள், தலைவர்கள் ஆகியோரை நேரில் அறிந்தவர்.

1930 – 1931: மலாய் நாடு கோலாலம்பூர் வார இதழில் பல கட்டுரைகள். YMCA-வைப் போல YMIA எனும் இந்திய இளையர் சங்கத்தின் இதழாகத் தொடங்கப்பட்ட ஏடு அது. துடிப்பும் சுறுசுறுப்பும் மிக்க இளைஞர் எம். கே. ராமச்சந்திரம் அதை நடத்தினார். ஆசிரியர் வேதன் ஏ. சந்திரராசன். இவர் சிங்கப்பூரிலும் மலாயாவிலும் பல பத்திரிகைகள் நடத்தியவர். எதுவும் நிலையாக நீடித்தபாடில்லை.

1931 – 1934: சென்னை தமிழ்நாடு நாளிதழில் மாணவர் பகுதிக்குக் கட்டுரைகள் எழுதியதுடன் அந்த ஏட்டின் கோலாலம்பூர் நிருபராக இருந்து வாரந்தோறும் மலாயாக் கடிதம் என்ற பகுதிக்குக் கட்டுரைகள் எழுதினார். சித்த வைத்திய டாக்டர் பி வரதராஜுலு நாயுடு 1922ல் சேலத்தில் வார இதழாக ஆரம்பித்து, பின் சென்னைக்கு மாறி 1926 ஏப்ரல் 14ல் தினசரியாக வந்தது. தேசத்தியாகி தி. சு. சொக்கலிங்கம் அதன் ஆசிரியர். சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் 1927 முதல் தம் 21ஆவது வயது தொடங்கி தமிழ்நாடு பத்திரிகையில் ஏழாண்டுகளுக்கு அச்சுக்கோப்பாளராக இருந்தவர்.

1931 – 1933: விக்டோரியா இன்ஸ்டிட்யூஷன் மாத சஞ்சிகையான THE VICTORIAN இதழில் ஆங்கிலக் கட்டுரைகள் எழுதினார் மாணவர் சிவீகு. சிங்கப்பூரில் வெளியான முன்னேற்றம் (வாரம்), பினாங்கிலிருந்து வந்த தேச நேசன் (வாரம்), ஜனவர்த்தமானி (வாரம்), ஈப்போவின் தமிழன் (தினசரி) ஆகியவற்றுக்குக் கட்டுரைகள் வழங்கினார்.

இதே காலக் கட்டத்தில் ஈரோட்டுக் குடி அரசு, பகுத்தறிவு, புரட்சி, சமரசம், டிக்கோயா (இலங்கை) ஆகியவற்றுக்கும் கட்டுரைகள் அனுப்பினார்.

1934 – 1936: கோலாலம்பூரில் நடைபெற்ற பாரதமித்திரன் வார இதழின் துணையாசிரியர். ஆர் ராமனாதன் இதன் ஆசிரியர். சிறுகதைகள், நாவல் தொடர்கள் ஆகியவை தாங்கி வந்த சீர்திருத்த ஏடு இது. பாரதமித்திரன் நடத்திய ஒரு சிறுகதைப் போட்டியில்தான் ந. பழனிவேல் கலந்துகொண்டு கிராமக் காட்சி கதை எழுதி $5 பரிசு பெற்றார். சமுதாய ஊழியன், தமிழ்ச்செல்வன், தொழிலாளி வாரப் பத்திரிகைகளுக்கும் கட்டுரைகள் எழுதினார் சிவீகு.

பினாங்கின் போனிக்ஸ் கெஜட் தமிழ் – ஆங்கில இதழுக்குப் படைப்புகளை அனுப்பினார்.

சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த REFORM ஆங்கில இதழ், தமிழ் முரசு, சீர்திருத்தம் மாத ஏடு, வாலிப சக்தி மாத இதழ் ஆகியவற்றுக்கும் அயராது கட்டுரைகள் அளித்தார்.

1934 – 1942: சென்னையில் நடைபெற்ற புது உலகம் மாத இதழ் மற்றும் பாரததேவி வார ஏடு, ஜனநாயகம் வார ஏடு, ஈரோட்டில் வெளியான பிரசண்ட மாருதம் மாதப் பத்திரிகை, ஜோலார்பேட்டையிலிருந்து வந்த சமதர்மம் மாத ஏடு, கும்பகோண ஏடாகிய அறிவுக்கொடி, மாயவரத்திலிருந்து வெளியிடப்பட்ட வெற்றி முரசு வார இதழ், திருச்சியின் அறிவு மாத ஏடு, தங்கவயல் வாரப் பத்திரிகையான தமிழன், புதுச்சேரியிலிருந்து வாரந்தோறும் வந்த புதுவை முரசு ஆகியவற்றுக்கு எழுத்துப் படைப்பை அனுப்பினார்.

1942 – 1945: சிங்கப்பூரில் சுபாஷ் சந்திர போஸ் அமைத்த சுதந்தர இந்தியத் தற்காலிக அரசாங்கத்தின் தமிழ் வெளியீடுகளாகிய சுதந்தர இந்தியா (கட்டுரைகள், கவிதைகள்) தினசரி, யுவபாரதம் (கட்டுரைகள், கவிதைகள்) வாரம், சுதந்திரோதயம் (கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள்) மாதம் ஆகியவற்றுக்குப் பிரதம ஆசிரியராக இருந்தார். ஆங்கில ஏடுகளான AZAD HIND, NEW LIGHT ஆகியவற்றுக்குக் கட்டுரைகள் எழுதியது. சுதந்தர இந்தியத் தற்காலிக அரசாங்கத்தின் செய்தி-பத்திரிகைத் துறை (Press and Publicity) துணை இயக்குநராகவும் பின்பு இடைக்கால இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

1946 – 1948: கோலாலம்பூர் ஜனநாயகம் தினசரிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர். சிங்கப்பூரிலும் கோலாலம்பூரிலும் நடைபெற்ற நவயுகம் இதழின் ஆசிரியர்.

1951 – 1954: தமிழ் முரசு துணையாசிரியர், சிங்கப்பூர். கோ சா நடத்திய INDIAN DAILY MAIL ஆங்கில தினசரியிலும் பணியாற்றினார். 1952 /1953ல் மலேசியாவின் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் கோலாலம்பூரில் நடத்திய சங்கமணி வார ஏட்டுக்கு சிங்கப்பூர் நிருபர்.

1957 – 1971: கோலாலம்பூர் அரசாங்கத் தகவல் இலாக்காவின் வெளியீடுகளாகிய ஜனோபகாரி (வாரம்), வளர்ச்சி (வாரம்), வெற்றி (மாதம்), ஜெயமலேசியா, மலேசியா குரல் (Warta Malaysia), பெம்பேனா (Pembena) ஆகியவற்றின் பிரதம ஆசிரியர். இங்குமங்கும் அலைந்துவிட்டுக் கடைசிக் கட்டத்தில் நல்ல வருமானம் தரும் (Division One Officer) அரசாங்க வேலையில் அமர்ந்த காலக்கட்டம் இது. 1971 ஆரம்பத்தில் அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு.

1971 ஜுலை – செப்டம்பர்: தமிழ் முரசு (கோலாலம்பூர்) நாளேட்டின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியது.

இந்நாட்டின் பத்திரிகைகள் வெளியிட்ட சிறப்பு மலர்களில் சி. வீ. குப்புசாமியின் கட்டுரைகள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.

தீபம், தமிழ் வட்டம் (1970), தில்லி தமிழ்ச்சங்க வெள்ளி விழா மலர் (1971) ஆகியவற்றிலும் அக்கரை இலக்கியம் நூலிலும் அவருடைய சிறப்புக் கட்டுரைகள் உண்டு.

செந்தூல் சுயமரியாதை சங்கம், செந்தூல் இந்திய வாலிபர் சங்கம், சிலாங்கூர் இந்தியர் சங்கம், கோல கிள்ளான் இந்தியர் ஒற்றுமை சங்கம், மலாயன் இந்தியர் காங்கிரஸ் ஆகியவற்றின் மூலம் பொதுப்பணிகள் ஆற்றியிருக்கிறார். பண்டித நேரு 1937ல் மலாயாவுக்கு வந்தபோது கிள்ளானில் பணமுடிப்பு அளித்துடன் அவருடைய சொற்பொழிவைத் தமிழில் மொழிபெயர்த்தார் சிவீகு. நேதாஜியின் சொற்பொழிவையும் பல தடவை மொழிபெயர்த்தார். பெரியார், பாரதிதாசன், திருவள்ளுவர் விழாக்களை முன்னின்று ஏற்பாடு செய்துள்ளார். 1946 ஏப்ரல் வரை சிங்கப்பூர்ப் பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் இருந்திருக்கிறார். சிங்கப்பூர் தமிழர் சீர்திருத்த சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர். அதன் மூலம் தமிழர் பிரதிநிதித்துவ சபை, தமிழர் திருநாள் இயக்கம் ஆகியவற்றிலும் சீரிய பணிகள் புரிந்தார்.

சிவீகு நூலாசிரியரும்கூட. வருங்கால நவயுகம் (1937), பெரியார் ஈ. வெ. ராமசாமி (1939) முதலான நூல்களைப் புனைந்தவர். காந்தாமணி அல்லது கலப்பு மணம் நாடக நூலையும் வெளியிட்டார்.

ஜப்பானியர் ஆட்சியின்போது ஒரு போலிக் குற்றச்சாட்டின் பேரில் ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்டுக் கொடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார் சிவீகு. அந்தக் கசப்பான அனுபவங்களை ஜப்பானிய லாக்கப்பில் ஏழு தினங்கள் (1946) என்ற நூலில் விவரித்திருக்கிறார். ‘ சுமார் இரண்டு மணி நேரம் எனது இம்சைப் படலம் இருந்து வந்தது. முதல் ஒரு மணி நேரத்தில் கசை அடிகளும் மற்ற பாதியில் மின்சார சக்தியைப் பிடிக்கச் செய்வதும், வாய் வழியாகத் தண்ணீரைக் குழாயிலிருந்து வயிற்றுக்குப் பாய்ச்சுவதும் நடந்தேறின. அப்படியே நான் பாதி உயிருடன் சோர்ந்து விழுந்தபோது ஜப்பானிய கிராதகர்கள் மீண்டும் என்னைத் தூக்கி நிறுத்தி ஒன்றன் மேல் ஒன்றாகப் பல குத்துகள் விட்டனர். மலேரியா, பெரி பெரி, இருதய பலவீனம் முதலியவைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டு எனது உடலுரத்தைச் சிதைத்துவிட்டன. ’

ஜப்பானியர் காலத்தில் ஜப்பானியரால் இம்சைப்பட்ட சி. வீ. குப்புசாமி பிரிட்டிஷார் திரும்பிவந்ததும் அவர்களாலும் இம்சைப்பட்டார். நேதாஜியின் முகாமிலிருந்தவர்கள் அச்சத்தோடும் ஐயத்தோடும் பார்க்கப்பட்டனர் வெள்ளைக்காரரால். பல பத்திரிகைகளை நடத்திப் பொதுச்சேவையிலும் சீர்திருத்தப் போக்கிலும் பிரிட்டிஷார் எதிர்ப்பிலும் முன்னணியில் இருந்த சி வீ கு-வின் மீது அவருடைய எதிரிகள் விஷமத்தனமாகப் புகார் செய்யவே, ஜனநாயகம் தினசரியை நடத்திக்கொண்டிருந்த தருணத்தில், அவர் கைதானார். 1948 ஜுன் முதல் 1949 டிசம்பர் வரை ஒன்றரை வருஷம் தடுப்புக்காவலில் வாட்டி வதைக்கப்பட்டார். உரலுக்கு ஒரு பக்கம் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பதுபோல ஜப்பானியர் கையிலும் பிரிட்டிஷார் கையிலும் நாடறிந்த எழுத்தாளர் ஒருவர் சிக்கித் தவித்தது வியப்பாக இருக்கிறது.

மலாயாவில் பிறந்து தமிழ்நாட்டைப் பார்க்காமல் இருந்த அவருக்கு 1968ல் சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தம் மூதாதையர் நாட்டைக் கண்ணாரக் கண்டு களிக்கும் வாய்ப்பை வழங்கியது.

1955 அக்டோபர் 29ல் மலாயாவின் முதல் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசினார் சிவீகு. (அதன் விவரத்தைக் கீழே காணும் பதிவில் காணலாம்.)

http://balabaskaran24.blogspot.com/2010/12/blog-post_07.html

மறுபடியும், 1967 மே 26ல் நிகழ்ந்த மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்து உரையாற்றினார் சிவீகு. தமிழ் நேசன் செய்தியை இங்கு வழங்குகிறேன். சில அரிய தகவல்கள் உள்ளன. பத்திரிகைப் பட்டியலும் எழுத்தாளர் பட்டியலும் உண்டு. மலாயா சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய, பத்திரிகை வரலாறு இதில் அடங்கிக் கிடக்கிறது. 43 ஆண்டுக்குமுன் வெளியிடப்பட்ட இந்தத் தகவல் அதுவரை இளைய தலைமுறை அறியாதது. சிவீகு நினைவிலிருந்து சொல்வதால் சில தவறுகள் தென்படலாம். அப்படிப்பட்ட ஒரு பிழைதான் தங்கை நேசன் என்ற பத்திரிகை 1865ல் பினாங்கிலிருந்து வெளியானது என்ற தகவல். இந்தப் பிழையைச் சிலர் மீண்டும் மீண்டும் விடாப்பிடியாகக் குறிப்பிடுவது சங்கடமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

இரண்டு மாநாடுகளுக்கிடையில் மிகப்பெரும் சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. 1957ல் மலாயா சுதந்தரம். 1960ல் அவசர காலம் முடிவு. 1963ல் மலேசியா உதயம். மலேசியமயம் எனும் பெயரில் மலாய்க்கூறுகள் வாழ்க்கையின், சமூகத்தின், சிந்தனையின், எழுத்தின் எல்லாத் தளங்களிலும் விரவி வரவேண்டும் என்ற கூக்குரல் ஒலிக்கத் தொடங்கிய காலம். உரையின் இறுதிப்பகுதியில் சிவீகு இதனை மறவாது நினைவுபடுத்துகிறார் என்பது அக்காலத்தின் எதிரொலி.

நூறாண்டுக்கு முன் தோன்றிய ‘தங்கை நேசன்’

ஐம்பது ஆண்டாகத் தமிழ் மலேசியாவில் வளர்கிறது

எழுத்தாளர் சங்க ஆண்டு விழாவில் சி. வீ. குப்புசாமி உரை

கோலாலம்பூர், மே 27 (1967) –

“ ஐம்பது ஆண்டுகளாகத்தான் இந்நாட்டில் தமிழ் வளரத் தொடங்கியது. அதற்முன் தமிழ் வளரவில்லை. இதற்குக் காரணம் அப்போதைய காலனி ஆதிக்கக் கொள்கையே ஆகும் என்றார் திரு சி. வி. குப்புசாமி.

தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டு விழா நேற்று மாலை அப்பர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இவ்விழாவில் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி திரு சி வீ உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். தன் உரையில் மேலும் கூறியதாவது:

இரண்டாவது உலகப் பெரும் போருக்குப் பிறகு தமிழ் எழுத்துத் துறையில் தீவிர உத்வேகமும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டுள்ளனவென்றாலும் அவற்றுக்கு அடிப்படையாக இருந்தவை அதற்கு முந்திய சூழ்நிலையும் நிலவரங்களும் என்பதை எவரும் மறுக்க முடியாது.

சுமார் ஐம்பது ஆண்டுகளாகத்தான் இந்நாட்டில் தமிழ் எழுத்துத்துறை வளர்ந்து வரத் தொடங்கி இருக்கிறது. இதற்கு முன்பு தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ் எழுத்து வளர்ச்சியிலும் எவரும் கவனஞ்செலுத்தவில்லை. அதற்கு அடிப்படையான காரணம் அக்காலத்திய காலனி ஆதிக்கக் கொள்கையாகும். தவிர அக்காலத்தில் இந்நாட்டிற்கு வருகை தந்த தமிழர்களும் இங்கிருந்த தமிழர்களும் பெரும்பாலும் படிப்பறிவு குன்றியே இருந்தனர்.

தவிர அவர்களிற் பெரும்பாலோர் தோட்டத் தொழிலாளர்களாகவும், ரயில்வே, மராமத்து, துறைமுகத் தொழிலாளர்களாகவும் இருந்தனர். எனவே முதலீடு செய்து பத்திரிகைகள் நடத்தவோ நூல்கள் வெளியிடவோ எவரும் முன்வரவில்லை. மேலும் அவற்றை வெளியிட்டால் அவற்றை வாங்கிப் படிக்கவும் போதிய தமிழறிவு படைத்தவர்கள் இல்லை.

பினாங்கில் 1865-ஆம் ஆண்டு வாக்கில் தோன்றிய ‘தங்கை நேசன்’, 1883ல் தோன்றிய ‘வித்தியா விசாரிணி’ போன்ற சில பத்திரிகைகள் இருந்தனவென்றாலும் அவை குறைப் பிரசவமாகவே ஆகிவிட்டன.

முதலாவது உலகப் பெரும் போருக்குப் பிறகு மக்களிடையே சுறுசுறுப்பும் ஆர்வமும் ஏற்படத் தொடங்கின. அதன் விளைவாகப் பினாங்கில் 1919 ஆம் ஆண்டு வாக்கில் சுவாமி பாலகந்தகசிவம் நடத்திய ‘சத்தியவான்’ என்னும் வார இதழும், முஸ்லிம் ஒருவர் நடத்திய ‘பாதுகாவலன்’ என்னும் வார இருமுறை இதழும் தொடங்கின. அந்த ஏடுகள் ஒன்றையொன்று காரசாரமாகத் தாக்கிக் கொண்டு இலக்கண, இலக்கிய, சமய சர்ச்சைகளைச் செய்ததால் ‘அற்பாயுளிலேயே’ மறைந்துவிட்டன.

1923 ஆம் ஆண்டு வாக்கில் கோலாலம்பூரில் ‘தமிழகம்’ என்ற பெயரில் ஒரு வார ஏடு தொடங்கப்பெற்றது. அதுவும் சிறிது காலத்திற்குள் மறைந்துவிட்டது. அதில் ஆசிரியராக இருந்த திரு கி நரசிம்ம அய்யங்கார் அவர்கள் அதிலிருந்து விலகி ‘தமிழ் நேசன்’ வார இதழை 1924 ஆம் ஆண்டில் தொடங்கினார். அது பிறகு வார இருமுறை, வாரம் மும்முறையாக வளர்ந்து தினசரியாகியது.

1930ம் ஆண்டுக்குப் பிறகே பல தமிழ் ஏடுகள் மலாயாவில் வளரத் தொடங்கின. சிங்கப்பூரில் ‘முன்னேற்றமும்’ (பிறகு தமிழ் முரசு), நவநீதம் (வார ஏடு), மலாக்காவில் ‘தமிழ்க்கொடியும்’ (மாதம்), ஈப்போவில் ‘இந்திய மித்திரன்’ (வார ஏடு), தமிழன் (தினசரி), ஆகியவையும், பினாங்கில் ‘தேச நேசன்’ (தினசரி), ‘ஜனவர்த்தமானி’ (வாரம்) ஆகியவையும், கோலாலம்பூரில் ‘மலாய் நாடும்’ (வாரம்), பாரதமித்திரன் (வாரம்), தொழிலாளி (வாரம்), ‘தமிழ்ச்செல்வன்’ (வாரம்) ஆகியவையும் தொடங்கப்பெற்றன.

இந்த ஏடுகளிலும் தமிழ் நேசனிலும் இந்நாட்டுத் தமிழர்களின் பல அரிய கட்டுரைகள் வெளிவந்தன. தவிர சிறுகதைகளும், தொடர்கதைகளும், கவிதைகள், பாடல்கள் முதலியனவும் வெளிவந்தன.

எனவே தமிழ் எழுத்துத்துறை 1930ம் ஆண்டுக்குப்பிறகே மலாயாவிலும் சிங்கப்பூரிலும் தீவிரமாக வளரத் தொடங்கியது என்று நாம் அறுதியிட்டுக் கூறலாம்.

1930ம் ஆண்டு வாக்கில் தமிழர்களிடைய ஒரு மறுமலர்ச்சி ஏற்படத் தொடங்கியதால் ஏடுகள் பல தொடங்கப்பெற்றன. அக்கால எழுத்தாளர்களில் திருவாளர்கள் கோ. சாரங்கபாணி, வை. ராஜரத்தினம், ம. ப. ரெத்தினசாமி, பழனிசாமி, கா. தாமோதரன், எம். எம். புகாரி, அ. சி. சுப்பையா ஆகியோரையும் கோலாலம்பூர் திரு கி நரசிம்ம அய்யங்கார், வேதன் ஏ. சந்திரராசன், ஜி. பார்த்தசாரதி, ஜெயமணி சுப்பிரமணியம், கே. பி. சுப்பையா, ஏ, ஆர். அய்யர் ஆகியோரையும், ஈப்போ பி. வேணுகோபால் நாயுடு, ரெ. ரா. அய்யாரு ஆகியோரைம், மலாக்கா திரு உ. அரு. அருணாசலம் செட்டியாரையும், பினாங்கு சுவாமி அற்புதானந்தா, ஜனாப் அ. ந. பு, ஹமீது களஞ்சியம், ஜனாப் எம். எம். மாலிம், கனகசுந்தரம் ஆகியோரையும் சிறப்பாகக் குறிப்பிடலாம். இவர்கள் தவிர இன்னும் பலர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவையும் எழுதியுள்ளனர். அக்காலத்தில் எழுதிய பலரை இங்கு பட்டியலிட்டுக் காட்டுவது எளிதன்று. அக்காலத்தில் சிறுகதைகள் நாவல்கள் எழுதியவர்களில் திருவாளர்களாகிய ஆர். இராமநாதன், ஜி. பார்த்தசாரதி, கோ. நீ. அண்ணாமலை, ஆர். ஹாலாஸ்யநாதன், மு. முத்தழகு, நாச்சியப்பன், வில்லிநாதன், இ. தில்லையம்பலம் ஆகியோரும் அடங்கியிருந்தனர்.

ஜப்பானியர் ஆதிக்கக் காலத்தில் (1942 முதல் 1945 வரை) தமிழ் எழுத்துத்துறை வளர்ந்தே வந்திருக்கிறது. அதுபற்றிய விவரமும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. எனவே அதனை இங்கு ஓரளவு சுட்டிக்காட்டுவது அவசியம் என்று கருதுகிறேன். அந்த நான்கு ஆண்டுகளில் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்பெற்ற இந்திய சுதந்தரக் கழகத் தலைமை அலுவலக ஏடுகளாகிய சுதந்தர இந்தியா (தினசரி), யுவபாரதம் (வாரம்), சுதந்திரோதயம் (மாதம்) ஆகியவற்றிலும், பினாங்கில் வெளியான ஜயபாரதம், ஈப்போவில் வெளியான புது உலகம், தைப்பிங்கில் வெளியான உதயசூரியன் ஆகியவற்றிலும் பல கட்டுரைகளும், சிறுகதைகளும், கவிதைகளும் வெளிவந்துள்ளன. வெளிநாட்டுப் பத்திரிகைகள் வராதிருந்த அக்காலவரையறையில் இப்பத்திரிகைகள் அனைத்தும் சீரிய இலக்கியத் தொண்டு செய்திருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

ஜப்பானியர் ஆதிக்கக் காலத்தில் திருவாளர்களாகிய சுவாமி அற்புதானந்தா, ஹமீதுக் களஞ்சியம், கோ. சாரங்கபாணி, சி. வீ. குப்புசாமி, பண்டிட் ப. ஆறுமுகம் (கிருஷ்ணதாசன்), கே. பி. சுப்பையா, ஜெயமணி சா. சுப்பிரமணியம், ஜி. பார்த்தசாரதி, சக்திமோகன், முத்துச் சொக்கலிங்கன், க. வீ. ம. நாராயணசாமி, கே. வீ. அழகர்சாமி, வ. கலியாணசுந்தரம், எஸ். ஏ. துரை, கு. மு. வீராசாமி, ஆதி நாகப்பன், நீ. சிவன், ந. பழனிவேலு (கவிதை, கட்டுரை, சிறுகதை), சா. சா. சின்னப்பதாஸ், சேதுராமன் ராகி, ரெ. சீனிவாசன், அ. இராசகோபால், வீ. ராஜகோபால், ஐ. டபிள்யூ. அப்துல் வஹாபு, பக்ருதீன் சாஹிப், தில்லைக்கனி, அப்துல் ஹமீது ஜங் ஆகியோரும் இன்னும் பலரும் கட்டுரை, கவிதை, சிறுகதை முதலியவற்றை எழுதியுள்ளனர். எனவே ஜப்பானியர் ஆதிக்கக் காலத்திலும் எழுத்துத்துறை கணிசமான அளவு வளர்ந்திருக்கிறது என்றே கூறலாம்.

ஜப்பானியர் சரணடைந்து, பிரிட்டிஷார் மீண்டும் மலாயாவுக்கு வருகை தந்த பிறகு தமிழ் எழுத்துத் துறையில் தீவிர மறுமலர்ச்சியும் உத்வேகமும் ஏற்பட்டதை இக்கால எழுத்தாளர் அனைவரும் அறிவர். ஆதலால் அவற்றை இங்கு விவரிக்கத் தேவையில்லை என்று எண்ணுகிறேன். ஆனால் இத்துறையில் தமிழ் நேசனும், தமிழ் முரசும் பிறகு மலைநாடும் இப்போது தமிழ் மலரும் பொன்னியும் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றன என்று கூற விழைகிறேன்.

மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தைப் பொறுத்த வரையில் அதுவும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து வருவதோடு சில அரிய தொண்டுகளைச் சென்ற ஆறாண்டுகளாகச் செய்து வருகிறது. தமிழ் எழுத்தாளர் சங்கம் தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்தது 1955 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்க் கலை மன்றத்தின் எழுத்தாளர் மாநாடு ஆகும். அந்த மன்றம் ஏற்பாடு செய்த அம்மாநாட்டிற்கு வருகை தந்திருந்தவர்கள் எழுத்தாளர் சங்கம் ஒன்று நிறுவப்பட வேண்டும் எனக் கருதினர். அதன் விளைவாக 1958ம் ஆண்டில் முதன்முதலாக எழுத்தாளர் சங்கம் கோலாலம்பூரில் தோன்றியது. சில ஆண்டுகள் அது நடைபெற்று வந்தது என்றாலும் எழுத்தாளர்களின் ஆர்வக் குறைவாலும், பிறகு அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்களின் அசட்டையினாலும் அச்சங்கம் மறைந்தது. என்றாலும் தமிழ் எழுத்தாளர்களிற் சிலர் தொடர்ந்து ஆர்வங் காட்டி வந்ததால் 1962 ஆம் ஆண்டில் அச்சங்கம் பதிவு செய்யப்பெற்று இன்றுவரை இடையறாமல் இயங்கி வருகிறது. இச்சங்கத்தின் வளர்ச்சியில் கண்ணுங் கருத்துமாய் இருந்துவரும் எழுத்தாளர் அன்பர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

எழுத்தாளர் சங்கம் அண்மையில் முக்கியத் திட்டங்களை நிறைவேற்றி இருப்பதை அன்பர்கள் அறிவார்கள். நீண்ட காலமாக நிறைவேற்றப்பட்டாமல் இருந்த எழுத்தாளர் யார்—எவர் என்னும் தொகுப்பு ‘மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்கள்’ என்ற பெயரில் வெளியிடப்பெற்றிருப்பதையும், சங்கத்தின் முத்திங்கள் வெளியீடாகிய ‘ஏடு’ என்பதை வெளியிட்டு வருவதையும் எல்லாரும் அறிவர். இந்த வெளியீடு சிறு அளவில் வெளிவருகிறதெனினும் காலப்போக்கில் அது மிகுதியான பக்கங்களையும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றையும் கொண்டு வெளிவரவேண்டும் என்பதே சங்கத்தின் நோக்கம். அன்பர்களின் ஆதரவைப் பொறுத்தே அந்த முயற்சி நிறைவேற வேண்டியிருக்கிறது.

சங்கம் மேற்கொண்ட முக்கியப் பணிகளில் திறனாய்வுக் கருத்தரங்கம் நடத்தப்பெறுவதும் ஒன்று. சங்கம் மேற்கொள்ள வேண்டிய பணிகளில் சிறுகதை வகுப்புகளும் இலக்கிய வட்டங்களும் மொழிபெயர்ப்புப் பயிற்சியும் நடத்தப்படுவதும் அடங்கியுள்ளன. ஆனால் அத்துறையில் கவனஞ்செலுத்துவதற்கு உறுப்பினர்கள் தங்களது ஆதரவுக் கரங்களை நீட்டவேண்டும். மலேசியாவில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் சங்கத்தில் உறுப்பினரானால் இக்காரியத்தை நிறைவேற்றுவது எளிதாக இருக்கும்.

தமிழ் இலக்கியமும் படைப்புக்களும் நமது தேசிய மொழியில் பெயர்க்கப்படுவதிலும் தேசிய மொழிப் படைப்புக்கள் தமிழில் பெயர்க்கப்படுவதிலும் நாம் இனி சிரத்தை காட்ட வேண்டும் என்பதே அந்த வேண்டுகோள். தமிழிலுள்ள நயங்களும் படைப்புத் திறனும் தேசிய மொழியில் இடம்பெறுமானால் நமது ஆற்றல்களை எல்லா இனத்தினரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அதேபோல தேசிய மொழி படைப்புக்கள் தமிழ் மொழியில் பெயர்க்கப்பட்டால் தமிழை மட்டும் அறிந்தவர்கள் அவற்றின் சிறப்புக்களை அறிந்து தமது எழுத்தாற்றலைத் தேசியக் கண்ணோட்டத்துடன் வளர்த்து வர முடியும். அதன் வழி தீவிர தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நாம் வழிவகை காணலாம். சில தமிழ் எழுத்தாளர்கள் இத்துறையில் ஆர்வங் காட்டத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால் அது போதுமான அளவில் இல்லை. அது பேரளவில் மேற்கொள்ளப்படவேண்டும் என்றே நான் விழைகிறேன்.

வெளியீட்டுத் துறையில் மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கவனம் செலுத்த ஆண்டுக்கு ஒரு நூலாவது சங்கத்தின் பெயரில் வெளிக்கொணர்ந்தால் அது சங்கத்தின் சிறப்பையும் முயற்சியையும் என்றும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கும். எழுத்தாற்றல் மிக்க நமது உறுப்பினர்களின் படைப்புக்கள் அச்சில் வெளிவராததால் அவர்களது திறமை குடத்திலிட்ட விளக்கு போன்றே இருந்து வருகிறது. எனவே சங்கம் இத்துறையில் தீவிர கவனஞ் செலுத்த உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தரும்படி வேண்டுகிறேன். “

தமிழகம் 1921ல் வெளியானது. சிவீகு சொல்வதுபோல 1923ல் அன்று. அவர் அறிந்தவரை தமிழ் இலக்கியத் தோற்றத்தை 1920களில் இருந்து தொடங்குகிறார். அதற்கு முன்னரே தமிழ்ப் பத்திரிகைகளும் எழுத்தாளர் படைப்புகளும் வந்துள்ளன என்பது இப்போது தெளிவாகத் தெரியவருகிறது. 1868ல் சிங்கப்பூர் வெ. நாராயணசாமி நாயக்கர் நன்னெறித் தங்கம் பாட்டு எனும் கவிதை நூலை சென்னையில் அச்சிட்டுக் கொண்டு வந்தார். இதுவே இவ்வட்டாரத்தின் முதல் தமிழ் நூல். சிங்கப்பூர் மகதூம் சாகிபும் நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரும் இணைந்து 1875ல் நடத்திய சிங்கை வர்த்தமானி பத்திரிகையே இவ்வட்டாரத்தின் முதல் தமிழ் ஏடு. 1875லிருந்து 1941 வரை சிங்கப்பூரிலும் மலாயாவிலும் மொத்தம் சுமார் 100 தமிழ்ப் பத்திரிகைகள் வந்துள்ளன. இவை தவிர இந்தியர்கள் நடத்திய ஆங்கில, மலாய், சீன, மலையாள, பஞ்சாபிப் பத்திரிகைகளும் இருக்கின்றன.

பல்முனை ஆற்றலும் ஏராளமான பத்திரிகைகளுடன் தொடர்பு கொண்டவருமான சி வீ குப்புசாமியைப் போன்ற ஒருவரை மலாயாவில் காண்பது அரிது. முதல் உலகப்போரில் பிறந்து, சீனியர் கேம்பிரிட்ஜில் முதல் கிரேடில் பாஸ் பண்ணி, இரண்டாம் உலகப் போரின் இன்னல்களை அனுபவித்து, சிறையில் பதினெட்டு மாதங்களைக் கழித்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட போதிலும் எழுத்துத் துறையிலேயே அரை நூற்றாண்டு உழன்று வாழ்க்கையை முடித்துக்கொண்டவர் அவர். சி வீ குப்புசாமி மிகவும் நிதானமானவர், அடக்கமானவர், ஆரவாரம் இல்லாதவர், புகழுக்கு அலையாதவர். பெரும் படிப்பாளி. கடும் உழைப்பாளி.

ஜப்பானியர் காலத்தில் அவர் பணியாற்றிய மூன்று பத்திரிகைகளையும் குடி அரசு இதழ்களையும் வேறு சில நூல்களையும பாதுகாப்பாக வைத்திருந்தார். அவர் காலமான பிறகு சா ஆ அன்பானந்தனின் உதவியுடன் நானும் டாக்டர் இரா தண்டாயுதமும் சிவீகு-வின் வீட்டுக்குச் சென்று அவற்றைக் கொண்டு வந்தோம். ஜப்பானியர் காலத் தமிழ்ச் சிறுகதைகள் என்ற என் கட்டுரை சிவீகு-வின் பொக்கிஷத்திலிருந்து கிடைத்த பெரும் பாக்கியத்தாலே சாத்தியமானது. நான் வெளியிட்ட மலேசியத் தமிழ்ச் சிறுகதை 1995 எனும் நூலில் அக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. அக்கட்டுரையை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறேன். Tamil Short Stories in Malaya during the Japanese Occupation 1942 – 1945 எனுந் அந்தக் கட்டுரை மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை வெளியிடும் தமிழ் ஒளி 1981 / 1982 மலரில் இடம்பெற்றுள்ளது.

மலாயாத் தமிழ் இதழ்களின் வரலாறு பற்றி எழுத விரும்பிய தண்டாயுதம் அந்தப் பத்திரிகைகளைக் கொண்டு சென்று ஒரு கட்டுரை மட்டும் தீட்டினார். அவரும் காலமாகிவிட்டார். மலாயா சிங்கப்பூர் தொடர்பான அரிய நூல்கள், இதழ்கள் தண்டாயுதத்திடம் நிறைய சேர்ந்துள்ளன. அவற்றை யாராவது மீட்டு வந்தால் புண்ணியமாக இருக்கும். மலாயாத் தமிழ் இலக்கியத்திற்கு எப்போதும் சோதனைதான். நாற்பது ஆண்டுகளுக்குமுன் டாக்டர் ராமசுப்பையா அரிதின் முயன்று மலாயா சிங்கப்பூர் எங்கணும் சென்று ஏராளமான நூல்களையும் இதழ்களையும் சேர்த்துக் கொண்டு வந்தார். தமிழ் மலேசியானா 1969 அந்தத் திரட்டின் வழி கிடைத்த பட்டியல்தான். ஆனால் அந்தப் படைப்புகள் யாவும் இங்குமங்கும் இடம் மாறி கடைசியில் இருந்த இடமே தெரியாமல் ஆகிவிட்டது. உள்ளதும் போச்சுதடா நொள்ளைக் கண்ணா! பேராசிரியர் எஸ் அரசரத்னம், விரிவுரையாளர் இரா தண்டாயுதம், ஆராய்ச்சியாளர் ராஜேஸ்வரி அம்பலவாணர், விரிவுரையாளர் ந. லோகநாயகி, ஆராய்ச்சியைத் தொடங்கிவிட்டு முடிக்காமல் போன மாணவர் வி ராமச்சந்திரன் போன்றோர் முக்கியமாக அந்தக் காலத்து நாவல்களையும் பத்திரிகைகளையும் பயன்படுத்திக் கட்டுரைகளும் நூல்களும் புனைந்தனர். அந்தத் தொடக்கம் அதோடு நின்றுபோனது பரிதாபம்.

தமிழ் மலேசியானாவைப் பற்றிய ஓர் அந்தரங்க விஷயம் உண்டு. மலேசியத் தமிழர்களின் ‘தன்மான மலேசியானா’ அது. 1969ல் அகால மரணமடைந்தார் ராமசுப்பையா. அவருடைய தம்பி எஸ்ஸாரெம் பழனியப்பன் மலேசிய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றபின் சமயத் துறையில் ஆழ்ந்து சில நூல்களை எழுதியவர். அவரும் இலக்கியவாதியே. 1972ல் தமிழ் நேசன் பவுன் பரிசுத் திட்டத்தைத் தொடங்கியபோது நியமிக்கப்பட்ட நீதிபதிகள் ஐவரில் பழனியப்பனும் ஒருவர். மற்ற நால்வர், டாக்டர் இரா தண்டாயுதம், நேசன் நிர்வாகி புலவர் சேதுராமன், டாக்டர் பிரமிளா கணேசன், ரெ கார்த்திகேசு ஆகியோர். எஸ்ஸாரெம் பழனியப்பன் 21 டிசம்பர் 1996ல் எனக்கு எழுதிய கடிதத்தில் தமிழ் மலேசியானாவின் ரிஷி மூலத்தைக் கொஞ்சம் பிட்டு வைத்திருந்தார்.

‘ தமிழ் எழுத்தாளர்களே இந்நாட்டில் இல்லை என்று பத்திரிகைகள் ஓலமிட்டதோடு அமையவில்லை. வெளிநாட்டு இறக்குமதிச் சரக்கான பல்கலைக்கழகச் சான்றோர் ஒருவரும் அந்தக் கூக்குரலை எழுப்பினார். அதனால் கொதிப்படைந்துதான், டாக்டர் இராம சுப்பையா, இந்நாட்டில் வெளிவந்த தமிழ் நூல்களைத் திரட்டித் தமிழ் மலேசியானாவைத் தொகுத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றினை வெளிக் கொணர முயன்றார். சந்தனக் கிண்ணத்தைப் பாடநூலாக்கி, இந்நாட்டு இலக்கியத்துக்கு உரிய தகுதியை உருவாக்க முயன்றார். அவரைத்தான் நன்றியில்லாத இந்தத் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் பத்திரிகை ஆசிரியருடன் கூட்டுச் சேர்ந்து கோவிந்தாப் போட்டுத் தமிழ்த் துரோகி பட்டந் தந்து பாடையும் கட்டினார்கள். ’

வெளிவந்த தருணத்தில் மகத்தான பிரமிப்பை ஊட்டிய தமிழ் மலேசியானாவுக்கு வயது ஆகிவிட்டது. புதிய தொகுப்பு எப்பொழுதோ வந்திருக்க வேண்டும். பூனைக்கு யார் மணி கட்டுவது? #

No comments: